Pages

Sunday, December 8, 2013

செல்போன்களால் கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை: நிபுணர் தகவல்

 
கடந்த வியாழனன்று தலைநகர் புதுடெல்லியில் 'மொபைல் போன்களும், பொது சுகாதாரமும்- மித் அண்ட் ரியாலிட்டி' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் உலக சுகாதாரக் கழகத்தின் கதிரியக்க நிபுணரான மைக்கேல் ரெபசோலி கலந்துகொண்டார். இவர் சுகாதாரக் கழகத்தின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் முதல் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
 
புத்தகத்தை வெளியிட்ட ரெபசோலி தனது உரையில் மொபைல் போன்களால் உபயோகிப்பாளர்களுக்கு எந்த கதிரியக்கப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று உலக சுகாதாரக் கழகத்தின் ஆய்வுகள் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார். புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பாதிப்புடையோரைத் தவிர மற்றவர்களுக்கு இதனால் தலைவலியோ, தூக்கக் குறைபாடுகளோ ஏற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
அடிப்படை நிலையக் கோபுரத்தைவிட ரேடியோ மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் ஐந்து மடங்கு அதிகமான அதிர்வெண் கதிர்வீச்சு வெளியாவதாகவும் கூறிய ரெபசோலி மொபைல் கோபுரத்தின் கதிர்வீச்சு வெளிப்பாடு இதனை ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்றார். புத்தக ஆசிரியரான ரவி.வி.எஸ்.பிரசாத் கூறுகையில், மொபைல் போன் உபயோகத்தின் பாதகமான விளைவுகள் குறித்து இதுவரை எந்த ஆய்வும் நிரூபித்ததில்லை என்றார்.
 
சூரிய ஒளியின் ஆற்றலில் ஆயிரத்தில் ஒரு மடங்கே உள்ள மொபைல் போன்களின் கதிர்வீச்சு சுகாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச பாதுகாப்பு விதிகளைவிட பத்து மடங்கு கடுமையான விதிகள் இந்தியாவில் பின்பற்றப்படுவதாகவும் பிரசாத் தனது உரையில் கூறினார்.

No comments:

Post a Comment