Pages

Monday, April 6, 2015

மண் பானைகளுக்கு மவுசு வருமா?

இயற்கையான முறையில் குடிநீரை சுவையாக்கும் மண்பாண்டங்களின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளில் மட்டுமன்றி, இப்போது குடிநீர்ப் பந்தல்களிலும் மண் பானைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குடிநீர் கேன்களே ஆக்கிரமித்துள்ளன.



இதனால், மண் பானைகளுக்கு எப்போது மவுசு வரும் என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை மண் பாண்டங்களின் பயன்பாடு அதிகளவில் இருந்தது.

மண் அடுப்பு, மண் சட்டி, மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட உண்டியல், குடுவைகள், அகல் விளக்குகள், தட்டுக்கள், பொம்மைகள் என வித விதமான பொருள்கள் உபயோகத்தில் இருந்தன.

நாளடைவில் சமையல் எரிவாயு அடுப்பின் பயன்பாடு அதிகரித்ததால் மண் அடுப்புகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது.

மேலும், வாடகை வீடுகளில் மண் அடுப்பை உபயோகிக்க வீட்டு உரிமையாளர்கள் தடை விதித்ததும் இத்தகைய அடுப்புகளின் புழக்கம் குறைந்து போனது. தற்போது அனைத்துப் பொருள்களும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப பிளாஸ்டிக், சில்வர் பாத்திரங்களாகி விட்டன.

ஒரு சில இடங்களில் மட்டும் பெயரளவில் மண் பானைகள் புழக்கத்தில் உள்ளன.

குறிப்பாக, அரசியல் கட்சியினர் குடிநீர்ப் பந்தல்கள் திறப்பதற்கு மண் பானைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குடிநீர்ப் பந்தல்களிலும் மண் பானைகளின் உபயோகம் வெகுவாகக் குறைந்து விட்டது.

இதனால் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் மண் பாண்டத் தொழிலாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இயற்கையாகவும், மருத்துவக் குணங்கள் நிறைந்து குளிர்ந்த வகையில் குடிநீரை அளிக்கும் மண்பாண்டங்களின் பயன்பாட்டை இளம்தலைமுறையினர் அறியவில்லை.

இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளிகள் கூறியதாவது:

அரசு சார்பில் எங்களுக்கு தொழில் தொடங்க வசதியும், மாதாந்திர ஓய்வூதியமும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண் பாண்டங்கள் செய்வதற்காக ஏரிகளில் மண் எடுக்கவும்

தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment