Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 14, 2014

நீங்கள் உண்பது பிளாஸ்டிக்கா?


'பிளாஸ்டிக் கரண்டிகளைக் கொண்டு உணவு சமைப்பதையும், பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு வகைகளையும் மற்ற பானங்களையும் சூடாக போட்டு வைப்பதையும் மக்கள் அறவே தவிர்த்துவிட வேண்டும்'' என்கிறார் மலேசியாவில் செயல்பட்டு வரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்.
 
இதுகுறித்து அவர் சொல்லும் தகவல்கள் நம்மை பிளாஸ்டிக் குறித்து மிகுந்த எச்சரிக்கை செய்கின்றன. ''சூடான உணவை பிளாஸ்டிக்கில் போடும்பொழுது அதிலிருந்து ரசாயனங்கள் உணவுக்குள் கசிகின்றன. பிளாஸ்டிக் உபயோகம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. உலக அளவில் பிளாஸ்டிக்கின் உபயோகம் 2012ல் 288 மில்லியனாக உயர்ந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பெரும்பாலான பொருட்களில் பிளாஸ்டிக் உள்ளது. அவற்றை நாம் அறியாமலேயே உட்கொண்டு விடுவதுதான் வேதனையான விஷயம். தெரிந்தே யாரும் பிளாஸ்டிக்கை உட்கொள்வதில்லை. ஆனால் பிளாஸ்டிக் பாத்திரங்களில், வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், பானங்களை உட்கொள்ளும்பொழுது அவற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. குறிப்பாக சூடாக உள்ள உணவை பிளாஸ்டிக்கில் போடும்பொழுது அதில் உள்ள  ரசாயனங்கள் நம் உடலுக்குள் செல்வது உறுதி.
பாரம்பரிய உணவு பொருட்களான நாசி ஹிம்பிட், இட்லி, சீனர்களின் ஹூவாட் பலகாரம் போன்றவற்றை இப்பொழுது பிளாஸ்டிக்கில் வைத்து அவிக்கிறார்கள்.
பாரம்பரியமாக இந்த உணவு வகைகளை வாழை இலை, தாமரை இலை, மூங்கில், பண்டான், பலா இலை ஆகியவற்றை வைத்து சமைத்தனர். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. பெரும்பாலான சமையலுக்குப் பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இட்லித் தட்டில் இட்லி அவிப்பதற்கு முன்பு அதன் குழியில் பிளாஸ்டிக்கைப் போட்டு மாவை ஊற்றுகிறார்கள். இப்படிச் சமைக்கும்போது இட்லி எளிதாக எடுக்க வரும் என்று காரணம் கூறுகிறார்கள்.
மக்கள்  பாலித்தீன் பைகளில் சூடான உணவுகளை வாங்கிச் செல்வது மலேசியாவில் பரவலாகக் காணும் காட்சி. உணவை பிளாஸ்டிக்கில் கிடத்தி வைக்கும்பொழுதும், சமைக்கும்பொழுதும், பேக் செய்யும்பொழுதும் அதிலிலுள்ள இரசாயனங்கள் உணவுக்குள் ஊடுருவி, நம்முடைய உடலுக்குள் சென்று ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
சில பிளாஸ்டிக் வகைகள் உணவைக் கிடத்தி வைக்க பொருத்தமானவை என்று கூறப்பட்டாலும் கூட, தொடர்ச்சியாக பிளாஸ்டிக்குகளில் உணவை உட்கொள்பவர்கள் இதன் பாதிப்புக்களுக்கு ஆளாகிவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான பிளாஸ்டிக்குகளை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிகிறோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும், முறையாக அப்புறப்படுத்துவது அவசியமாகும். வெவ்வேறு விதமான பிளாஸ்டிக்குகளை ஒன்றாகச் சேர்த்து மறுசுழற்சி செய்யும்பொழுது, சுற்றுச்சூழல் மாசுகேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்குகளை உணவுப் பாத்திரங்களாகவும், தண்ணீர் பாட்டில்களாகவும் மாற்றி அமைக்கும்பொழுது, குறிப்பாக குழந்தைகளுக்கு உணவு பரிமாறும்பொழுது அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறது.
குப்பைத் தொட்டிகளுக்கு சென்று சேரும் பிளாஸ்டிக்குகள் சில நாட்களுக்குப் பிறகு நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. கச்சா எண்ணெய் அல்லது இயற்கை வாயு ஆகியவற்றை சூடாக்கி, நிறைய ரசாயனங்களைச் சேர்த்து மீச்சேர்ம இணைவு (polymerization) என்ற முறையில் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் தன்மையை வேறுபடுத்தி அமைப்பதற்காக, பிறகு அதில் வெவ்வேறு விதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக்கை எரிக்கும்பொழுது அதிலிருந்து டையாக்சின் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் வெளிப்படுகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுத்தன்மையை நிரூபிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமாக இருக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுப்பப்படுமானால் அதனை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது .'' என்கிறார் அவர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் இந்த கருத்துக்கள் வெறும் வேண்டுகோள் அல்ல; எதிர்வரும் தலைமுறையினரின் ஆரோக்கியத்திற்கான கடும் எச்சரிக்கை.
 

No comments:

Post a Comment