Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 2, 2014

நீர் இறைவனின் முதல் கொடை


'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து.

உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 


75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் 2.5% நீர் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது.

ஆக, நாம் வாழ்வது மீதம் உள்ள 0.2% குடிநீர் ஆதாரங்களை கொண்டுதான்.

மழைநீர் முன்னொரு காலத்தில் சுத்தமான குடிநீராகக் கருதப் பட்டு வந்தது. ஆனால் வானம் மாசுபடத் தொடங்கியதும், அதுவும் மாறிப் போனது.

என் சிறுவயதில் கூட, தெளிந்து ஓடும் தென்பெண்ணை, காவேரி முதலிய ஆறுகளில் இரு கைகளையும் குவித்து, நீரை மொண்டு, குடித்திருக்கிறேன். இன்று நீரும் இல்லை, கேட்பாரும் இல்லை. இருக்கும் சில நதிகள், சுயநலக் காரர்களால் மாசு படுத்தப் பட்டு, விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலைமை.

இவ்வளவு விஷயங்களும் நடந்து முடிந்திருப்பது இந்த 40 வருடங்களில்தான். தொழில் புரட்சி செய்கிறோம் எனும் பெயரில், குடிநீர் எனும் வாழ்வாதாரத்தையே அழித்து விட்டார்கள் மகா பாவிகள்.

இதை கவனித்து, சரி செய்ய அரசாங்கத்திற்கும் நேரம் இல்லை. நல்ல குடிநீருக்கு ஏற்பாடு செய்வதில் அக்கறை இல்லாத அரசாங்கம், நல்ல 'குடி'க்கு மட்டும் தயங்காமல் ஏற்பாடு செய்கிறது.

எல்லாவருக்கும் சுயநலம். யாரவது ஒருவன் வந்து இந்தப் புவியைக் காப்பான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம், மக்களாகிய நாம், மட்டுமே இதை திருத்த முடியும்.

மரம் நடுங்கள். மரம் நடுங்கள். மரம் நடுங்கள்....

மரங்கள் உங்கள் பிள்ளைகள். உங்களுக்கு வயதானால் முதியோர் இல்லத்தில் சேர்க்காது. நல்ல பழங்களைத் தரும். ஒரே ஒரு விதை போட்டால், பூமித்தாயும் கருத்தரித்து, உங்களுக்கான பிள்ளைகளை பெற்றுத் தருவாள், உங்களை வாழ்நாள் முழுதும் கையில் வைத்துக் காப்பாற்ற.

கையளவு இடம் இருந்தாலும், இன்றே அதை சுத்தம் செய்து ஏதேனும் ஒரு விதையை விதையுங்கள்...

அடுக்கு மாடியில் குடியிருப்போர் தங்கள் பால்கனிகளில் ஏதேனும் பயிரிடுங்கள். அல்லது மொட்டை மாடிகளில் தோட்டம் போடுங்கள்....

பச்சை நிற இலைகளை, காற்று தடவிச் செல்லும், சூரியன் உணவு கொடுக்கும், ஒரு துளி நீர் குடித்து, ஒரு வருட நீரை உங்களுக்கு மழையாகத் திருப்பிக் கொடுக்கும் அதே செடி.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் சொன்னது போல தாவரம் ஒரு உயிர்.

இரண்டே நாட்களில் உங்களிடம் பழகிவிடும்...... அப்புறம் உங்களை அதுவும், நீங்கள் அதையும் கைவிட மாட்டீர்கள்....

No comments:

Post a Comment