Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 12, 2015

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

இன்றைய உலகில் பலர் படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வு செய்ய விரும்புகிறார்கள். பள்ளிப்படிப்பில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம். இதில் பெரிய அளவு பிரச்னை எதுவுமில்லை. உங்கள் எதிர்காலத்தின் பொருட்டு நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம். 

உங்கள் விருப்பம் மற்றும் தேவையைப் பொருத்து நல்ல கல்லூரியில் சிறப்பான படிப்பை தேர்வு செய்து கடின முயற்சி செய்து படியுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திறமை, உங்களின் நிதிநிலை மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றை எப்போதும் கவனத்தில் கொண்டு படிப்பை தேர்வு செய்யுங்கள். உங்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பிற்கு பிறகு நீங்கள் தேர்வு செய்து படிக்க பல்வேறு பணிவாய்ப்புகளை கொண்ட படிப்புகளை இங்கு பார்ப்போம்.

* அறிவியல், வணிகம் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கான சிறந்த படிப்பு மற்றும் பணி வாய்ப்பு:

வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவான சேர்க்கையை பெறுவீர்கள். அறிவியல் பிரிவானது முக்கியமாக பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் பிரிவுகளில் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆனால் அப்படிப்புகளில் சேர்வதற்கு நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி முக்கியமானதாகும். அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் நடத்தும் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

கலை மற்றும் வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் வாயிலாக பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் என்ன படிப்பை படித்தாலும் பல நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கும் போட்டித்தேர்வுகளை எழுதுவது மிக முக்கியம். உங்களின் படிப்பை தேர்வு செய்கையில் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். மேலும் எங்கே அதிக வாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ளன என்பதை மனதில் வைக்க வேண்டும்.

* அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான படிப்புகள்:

மருத்துவ அறிவியல் பிரிவு, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ், பி.பார்ம், பிபிடி, பிஎச்எம்எஸ், நர்சிங், பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, பிஎஸ்சி இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி துணைநிலை மருத்துவ அறிவியல்கள். இவை தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், கணினிகள், உணவு தொழில் நுட்பம், மண்ணியல், ஹோம்சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ், புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் படிப்புகள், கால்நடை பராமரிப்பை உள்ளடக்கிய வேளாண் படிப்பு, கால்நடை அறிவியல், பால்பண்ணைத் தொழில் மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பி.எஸ்.சி படிப்பு மேற்கொள்ளலாம்.

* பொறியியல் துறை வாய்ப்புகள்:


திறமையான மாணவர்களுக்கு பொறியியல் என்பது பிரகாசமான, எப்போதும் பணிவாய்ப்புகளை வழங்கும் பசுமையான துறையாகும். ஆனால் இன்றைய நிலையில் கல்வி வியாபாரத்தின் காரணமாக எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகளாகவே உள்ளன. எனவே பொறியியல் படிப்பில் சேரும் முன்னதாக சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரம், தரம் குறித்து நன்கு ஆய்வு செய்வது முக்கியம். மேலும் பொறியியல் படிப்பை பொருத்தவரை செகண்டரி பீல்டை விட பிரைமரி பீல்டை தேர்வு செய்வதே சிறந்தது.

இதில் கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மெட்டலார்ஜிக்கல், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பாலிமர் இன்ஜினியரிங், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

* வணிக பிரிவு மாணவர்களுக்கான படிப்புகள்:

சிபிடி (காமன் ப்ரொஃப்சின்சி டெஸ்ட்) எனப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சிஏவில் சேரலாம். படித்துக் கொண்டிருக்கும் போதே பலதரப்பட்ட அரசு பணிகளுக்கு முயற்சிக்கலாம். அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படித்தால் பணி செய்து கொண்டே படிக்கலாம். சாட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் கல்வி நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி சிஏ வாய்ப்பு பிபிஏ மற்றும் பிபிஎம், பிகாம், பிஏ எக்னாமிக்ஸ், பி.ஏ ஜெர்னலிசம், பிஎஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்பினை தேர்வு செய்யலாம்.

* சட்டத்துறை படிப்புகள்:

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மாணவர்களின் பார்வை சட்டத்துறையின் மீது திரும்பியுள்ளது. ஆனால், அந்த துறையில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்பது பற்றிய தெளிவான முடிவு எடுப்பதற்கு தடுமாறுகிறார்கள். பெரும்பாலான சட்ட மாணவர்கள் இளநிலை படிப்பை முடித்தாலே பணி வாய்ப்புகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். 

ஆனால், அது தவறு. சட்டத்துறையில் முதுநிலை படிப்பு, ஒரு மாணவன் அத்துறையில் விருப்பமான அம்சங்களை புரிந்துகொள்ள உதவுவதுடன் அதில் சிறந்து விளங்கவும் வழிவகை செய்கிறது. சட்ட முதுநிலை படிப்பை முடித்தவர்கள் இளநிலை படிப்பை முடித்தவர்களை விட சிறந்த பணி வாய்ப்புகளை பெறுகின்றனர். குறிப்பிட்ட பிரிவில் ஸ்பெஷலைசேஷன் செய்வது தொடர்பானது முதுநிலை படிப்பு என்பதால் இதை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் நல்ல வரவேற்பு உண்டு.

No comments:

Post a Comment