Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 15, 2015

ஆஸ்துமா அச்சம் வேண்டாம்! வந்தாச்சு புது சிகிச்சை


நீங்கள் மாசு நிறைந்த இடத்துக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. இளைப்பு ஏற்படுகிறது. மூச்சு விட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தது போல் உணர்கிறீர்கள். இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று அர்த்தம்.
ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்லுவதைவிட, நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொற்றுநோய் இல்லை; ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் 2 கோடிப் பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது. இதில் 15 சதவீதம் பேர் குழந்தைகள்.
ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வர முக்கிய காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், பிள்ளைக்கு வர 70 சதவீதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.
நுரையீரல், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபோது அவை ஆஸ்துமாவுக்கு வழி அமைக்கும்.
சரி, ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது?
இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் மூச்சுக்குழல் மற்றும் மூச்சுச் சிறுகுழல்களில் (Bronchioles) மென்தசைகள் சுருங்கிவிடுகின்றன. அதோடு மூச்சுக்குழலில் சவ்வு வீங்கிக்கொள்ள, மூச்சுப் பாதை சுருங்கி விடுகிறது.
இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து திரவம் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது.
மிகக் குறுகிய மூச்சுக்குழல் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்கிறது. சிகிச்சைக்குப் பிறகு அல்லது ஒவ்வாமை விலகியதும் இந்தப் பிரச்னைகள் எல்லாமே படிப்படியாகக் குறைந்துவிடுவது வழக்கம்.
ஆஸ்துமாவில் இரண்டு வகை உண்டு. இதுவரை சொன்னது, ‘மூச்சுக்குழாய் ஆஸ்துமா’ (Bronchial asthma). இன்னொன்று, ‘இதய ஆஸ்துமா’ (Cardiac asthma). அதாவது, இதயத்தின் இடது கீழறை வீங்கிச் செயலிழப்பதால் வருகின்ற மூச்சிளைப்பு இது. பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இது வருகிறது. ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆஸ்துமா எந்த வகை என்று பரிசோதித்துத் தெரிந்துகொள்வது நல்லது.
ரத்தப் பரிசோதனைகள், மார்பு எக்ஸ்-ரே, ஈசிஜி, எக்கோ ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சைமுறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை.
இன்றைய நவீன மருத்துவ முன்னேற்றத்தில் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் நிறைய உள்ளன. மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, நோய்த்தொற்றைக் குணப்படுத்துவது என பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. முக்கியமாக ‘இன்ஹேலர்’ மற்றும் ‘நெபுலைசர்’ சிகிச்சைகள் இப்போது பிரபலம்.
என்றாலும் சுமார் 20 சதவீதம் பேருக்கு இந்தச் சிகிச்சைகள் பலன் தருவதில்லை என்பதும் உண்மை. இவர்கள் ஆஸ்துமாவால் மிக மோசமாக அவதிப்படுவதுண்டு. இவர்களுக்காகவே ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது ‘ஆஸ்துமா தெர்மோபிளாள்டி’(Asthma Thermoplasty) சிகிச்சை.‘பிராங்கோஸ்கோப்பி’ எனும் கருவியைப் பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. கணினியுடன் இணைக்கப்பட்ட நீண்ட குழாயின் ஒரு முனையில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
பிவிசி ரப்பர் குழாயில் பல அடுக்கு மின்சார வயர்களைச் செலுத்தி இருப்பதைப் போல, இதனுள் வெளிச்சம் செலுத்த, காட்சிகளைப் பிரதிபலிக்க என்று அடுக்கடுக்கான வேலைகளைச் செய்ய பல வயர் அமைப்புகள் உள்ளன. நுரையீரலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும் குழாய்களுக்கும் ஏற்ப வளைந்து நெளிந்து செல்லும் நெகிழ்வுத்தன்மை உடையது. இதை நுரையீரலுக்குள் நுழைத்து, உள் உறுப்புகளைக் கணினித் திரையில் பார்த்தும் துல்லியமாக சிகிச்சை தர முடியும்.
தெர்மோபிளாஸ்டி சிகிச்சையின்போது இதை வாய் அல்லது மூக்கு வழியாக தொண்டையைத் தாண்டி நுரையீரலுக்குள் அனுப்புகிறார்கள். மூச்சுக்குழலை அடைந்ததும், கருவியின் முனையில் சுருங்கிய வடிவில் இருக்கும் பலூன் அமைப்பை வெளியேற்றி, பாராசூட்டை விரிப்பது போல் விரிக்கிறார்கள்.
அங்கு சுருங்கி இருக்கிற மூச்சுக்குழாய் இதனால் விரியும். இதைத் தொடர்ந்து ரேடியோ ஃபிரீகுவன்ஸி அலைகளை சுமார் 10 நொடிகளுக்குச் செலுத்துகிறார்கள். இவை 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உண்டாக்கி அங்கு அடைத்துக்கொண்டிருக்கும் மென்தசைகளைக் கரைத்துவிடும்.
இதன் பலனால் மூச்சுக்குழாய் அடைப்பு முற்றிலும் நீங்கிவிடும். மூன்று வாரங்கள் இடைவெளியில் மொத்தம் 3 முறை இதைச் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் குறைந்தது 5 வருடங்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதில்லை. இந்தச் சிகிச்சையை வெளிநோயாளியாகவே மேற்கொள்ள முடியும். மறுநாள் இயல்பான பணிகளைச் செய்யமுடியும். ஒரே ஒரு நிபந்தனை, இதை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ளமுடியும். 2010ல் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட இச்சிகிச்சை தற்போது இந்தியாவில் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரிய நகரங்களில் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment