Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 21, 2015

எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்!

எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ

(மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-21)

சென்னையில்,  "அவனா எம்டனாச்சே... !" என்ற சொல் வழக்கு கொஞ்ச காலம் முன்னாடிவரை சகஜமாக இருந்தது. எம்டன் என்பதை சிலர் எமன் என்ற அர்த்தத்தில் சொல்வர். சற்றே சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர் என்பது தெரிந்திருக்கும்.
1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக இருந்த ஜெர்மானியர்கள்,  இங்கிலாந்தை தாக்குவதற்கு படை திரட்டி வந்தனர். இந்தியாவும் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவும் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

சென்னஇமுதல் உலகப் போரில் இந்தியாவையே ஜெர்மானியர்கள் எதிர்த்தபோதும், இந்தியாவின் மீது முதல் உலகப் போரை ஒட்டி குண்டு வீசப்பட்ட இடம் என்ற பெருமை (?) சென்னைக்கு உண்டு.
எம்டன் என்ற போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் வந்து நின்றது. 1914, செப்டம்பர் 22-ம் தேதி,  எதற்கும் இருக்கட்டும் என்று சென்னை கரையை நோக்கி குண்டு வீசியது. சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தில் வந்து விழுந்த அந்த குண்டு, அங்கே ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்தியது. 'தொடர்ந்து குண்டுகள் வீசப்படும்.. சென்னை நகரம் அழிக்கப்படப் போகிறது...!' என்று செய்தி பரவியது.
சென்னை மக்கள் சிலர் தங்கள் சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு சொந்த ஊருக்குச் சென்றதும் நடந்தது. சிலர் போட்டது போட்ட படி வீட்டைப் பூட்டிக் கொண்டு தமது உறவினர் வீடுகளை நோக்கி வெளியூர் சென்றனர். அடுத்து குண்டு வீச்சுகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும், எம்டன் கப்பல் அந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு மௌனமாக நின்றிருந்தது. பிரிட்டீஷ் படையும் பதிலுக்குத் தயாரானது.

'சென்னை நகரம் அழிக்கப்படும்' என்று புரளி கிளப்புபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. குண்டு விழுந்த அந்த இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது.சென்னை நகரத்தின் கதையை எழுதிய மா.சு.சம்பந்தன், குண்டு விழுந்த நேரத்தில் தெறித்த சேறு,  ஃபர்ஸ்ட் லைன் பீச் பகுதியில் இருந்த பல கட்டடங்களின் மீது பட்டு இருந்ததாக மக்கள் பேசிக்கொண்டதைப் பதிவு செய்திருக்கிறார்.
இவ்வளவு அச்சுறுத்தலாக இருந்த எம்டன் கப்பலைத்தான் சென்னை மக்கள் 'அவனா எம்டன் ஆச்சே' என்று அடையாளப்படுத்தினர்.
'எம்டன்' என்று ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டபோது ஏதோ சரித்திரக் குறிப்பு, திரை உலகில் நின்று நிலைக்கப்போகிறது என்று எதிர்பார்த்தேன். எம்டன் என்பது ஆங்கில வார்த்தை என்று அந்தப் படத்துக்கு அரசின் சலுகை மறுக்கப்பட்டது. எம்டன் என்பது 'எம் மகன்' என்று மாறி, தமிழ் காப்பாற்றப்பட்டபோதும் எம்டன் நிராகரிக்கப்பட்டதில் எனக்குள் ஒரு மெல்லிய சோக இழை ஓடியது.
எம்டன் கப்பலை ஒட்டி ஒரு சர்ச்சை எழுந்தது நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆர். தம் பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அன்றைய நாளில் நடிகர், நடிகைகள் தங்கள் வயதைச் சொல்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். அல்லது குறைத்துச் சொல்லி வந்தனர்.

ஒரு முறை எம்.ஜி.ஆர். ஒரு பேச்சில் சென்னையில் எம்டன் குண்டு வீசப்பட்டபோது தாம் கைக்குழந்தையாக இருந்ததாகவும், சென்னையில் நிலவிய பதட்டம் தனக்கு நினைவிருப்பதாகவும் சொன்னார். இது அன்றைய எம்.ஜி.ஆர். எதிரிகளிடம் பெரிய ஆதாரமாக மாறியது. 'எம்டன் குண்டு 1914-ல் வீசப்பட்டது. அப்போது அவருக்கு இரண்டு வயது என்று வைத்துக்கொண்டாலும் 1917-ல் பிறந்ததாக அவர் சொல்வது அப்பட்டமான தவறு. ஐந்து வயதைக் குறைத்துச் சொல்கிறார்' என்று எழுதினார்கள், பேசினார்கள்.'என்னுடைய சிறுவயதில் எம்டன் குண்டு பற்றி பெரியவர்கள் பதட்டமாகப் பேசியது நன்றாக நினைவிருக்கிறது என்றுதான் சொன்னேன். எம்டன் குண்டு விழுந்த பத்து வருடங்கள் கழித்தும் மக்கள் அதை பரபரப்பாகப் பேசினார்கள்' என்று எம்.ஜி.ஆர் விளக்கம் அளித்தார்.
எம்டன் குண்டு காரணமாக தெறித்த சேறு, எம்.ஜி.ஆரின் மீதும் பட்டிருப்பது ஒரு சரித்திர அடையாளம்தான்.
தொடரும்...

No comments:

Post a Comment