வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்...
சங்கர ஸ்ரீனிவாசன், சி.ஓ.ஓ., Realtycompass.com
வீடு வாங்குவது என்பது பெரும்பாலான மக்களின் லட்சிய மாகவும், கனவாகவும் இருக்கிறது. வீடு வாங்குவது என்பது, ஒரு நபர் தனது வாழ்நாளில் எடுக்கும் மிக முக்கிய முடிவுகளில் ஒன்று. தெரியாத்தனமாக தவறான இடத்தில், தவறான பில்டரிடமிருந்து வீடு வாங்கி விட்டால் அது பெரும் சுமையாக மாறிவிடும்.
அதுவும் சென்னை முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் கட்டும் போதே, சரிந்துவிழுந்து 61 பேர் பலியான சம்பவத்துக்குப்பின் வீடு வாங்குவதில், அதிலும் குறிப்பாக, ஃப்ளாட் வாங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது. வீடு வாங்கும்போது பின் வரும் 10 விஷயங்களைக் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள்.
1.கட்டுமான நிறுவனத்தின் தரம்!
கட்டுமான நிறுவனத் தின் தரம் / நம்பகத் தன்மையைத்தான் முதன்மையாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான கட்டுமான நிறுவனத்திடமிருந்து வீடு வாங்குவது, வாங்குபவரின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடும். கடந்த காலங்களில் அந்தக் கட்டுமான நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை நேரில் சென்று பாருங்கள். எவ்வளவு திட்டங் களை அந்த பில்டர் சரியான நேரத்தில் முடித்து வழங்கியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அத்துடன் அவர் கட்டித்தந்துள்ள வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கட்டுமானத் தரம், வாடிக்கையாளர் சேவை, அந்தத் திட்டங்களில் உள்ள அனுமதி மீறல்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளுங்கள்.
பில்டர் ஏற்கெனவே கட்டிய வீடுகளைப் பார்க்கும்போது, 5-8 ஆண்டு களுக்கு முன்பு அவர் கட்டிக் கொடுத்த பழைய வீடுகளை நேரில் சென்று பார்ப்பது நல்லது. அப்போதுதான் அவை தரமானதாகக் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். புத்தம் புதிய வீட்டில் கட்டுமானக் குறைபாடுகள் வெளிப்பார்வைக்குத் தெரியாது. மேலும், அந்த பில்டருக்குக் குறைந்தது பத்தாண்டுகளாவது கட்டுமானத் துறையில் அனுபவம் இருப்பது நல்லது.
2.சட்டபூர்வ அனுமதிகள்!
எந்தவொரு  வீட்டையும் வாங்குவதற்கு முன், கட்டுமான நிறுவனத் துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்முன் அந்தத் திட்டத்துக்குத் தேவையான சட்டபூர்வ அனுமதிகள் பெறப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
சிஎம்டிஏ / டிடிசிபி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் லே-அவுட் மற்றும் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா என்பதைக் கவனிப்பது அவசியம். மேலும், நிலத்தின் சொத்துரிமை சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3.அமைவிடம் மற்றும் வசதிகள்!
ரியல் எஸ்டேட்டின் மதிப்பு என்பது பெரும்பாலும் அமைவிடத்தைப் (லோகேஷன்) பொறுத்தே உள்ளது. நாம் வீடு வாங்க இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள வசதிகளைக் கவனிப்பது அதிமுக்கியம். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை கள், பூங்காக்கள் ஆகியவை அருகில் இருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். இவையாவும், வீட்டிலுள்ள வயதான வர்கள், குழந்தைகளுக்கு முக்கியமான தேவைகள் ஆகும்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் இருந்தால் இல்லத்தை எளிதாக அடைய முடியும். உங்கள் இல்லத்துக்கும் உங்கள் பணியிடத்துக்கும் இடைப்பட்ட தூரமும் நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான கருத்தாகும்.  உங்கள் பணியிடத்திலிருந்து அருகில் அமையும் விதத்தில் தேர்ந்தெடுங்கள்.
அலுவலகம் அருகே வீடு வாங்க முயற்சி செய்யுங்கள். அலுவலகம் நகரத்தில் இருக்கும்பட்சத்தில் வீட்டின் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும். அந்த நிலையில் புறநகரில் வீட்டை வாங்குங்கள். அப்போது பஸ், ரயில் நிலையம் அருகில் இருப்பதுபோல் வாங்கினால், அலுவலகம் சென்றுவர வசதியாக இருக்கும். இது உங்களுக்கு நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.
4 கூடுதல் வசதிகள்!
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூடுதல் வசதிகள் என்பவற்றில்  உள்ள சாதக, பாதகங்களை நன்கு புரிந்துகொள்வது முக்கியமானது. அதிகமான வசதிகளைக் கொண்ட வீடு எனும்போது அதனை வாங்கும்போதும், வாங்கிய பின்பும் பராமரிப்புச் செலவினம் எனும் வகையில் அதிகச் செலவை ஏற்படுத்திவிடும். உங்கள் வீட்டின் அமைவிடத்துக்கேற்ப வசதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
உதாரணம்: உங்கள் வீடு நகரத்திலேயே உள்ளது எனில், திறந்தவெளி தியேட்டர், சமுதாயக் கூடம் போன்ற வசதிகளை நீங்கள் தவிர்த்துவிடலாம். ஏனெனில், அவை தேவைப்படும் நேரத்தில் பணத்தைச் செலுத்தினால், உங்கள் வீட்டுக்கு அருகாமையிலேயே கிடைத்துவிடும். இருப்பினும், 24 மணி நேர பவர் பேக்-அப் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் இன்றியமையாதவை.
உங்கள் இல்லம் நகரத்துக்கு வெளியே இருக்கும்பட்சத்தில் உடற்பயிற்சி நிலையம், சந்தை, மருத்துவமனை ஆகியவை அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இருப்பதுபோல் பார்த்துக் கொண்டால் நல்லது.
5 குடிபுகும் காலம்!
வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்குமுன் அது உங்கள் வசமாகும் தேதியை கவனத்தில் கொள்ளுங்கள். உடனடியாகக் குடியேறும் விதத்தில் தயார் நிலையில் உள்ள வீட்டை வாங்குவது சிறந்தது. ஏனெனில், வீட்டுக் கடன் வாங்கி இருக்கும்பட்சத்தில், வருமானச் வரிச் சலுகை மூலம் கணிசமாக வரியைச் சேமிக்க முடியும்.
இருப்பினும் தயார் நிலையில் உள்ள வீடுகளை வாங்கும் போது இரண்டு சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கட்டுமானம் முடிவுற்று தயார் நிலையில் உள்ளதால், பெரும்பாலான வீடுகள் விற்பனை செய்யப்பட்டு, மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான வீடுகளே நீங்கள் தேர்வு செய்வதற்கு இருக்கும். வீட்டின் உள்புறம் உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றம் செய்ய முடியாது. வழக்கமாக, அறிமுகக் காலத்தில் ஒரு சதுர அடிக்கான விலையானது, கட்டுமானம் நிறைவேறும் காலத்தில் வெகுவாக உயர்ந்துவிடும். திட்டம் முடிவுறும் நிலையில் இருப்பதால், இன்னும் விலை வேகமாக உயர்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அந்தவகையில் முதலீட்டு நோக்கத்தில் வாங்குபவர்களுக்கு விலை வேகமாக ஏறாது. அதேநேரத்தில், வீடு உடனே கிடைப்பதால், உடனே குடியேறலாம் அல்லது வாடகை வருமானம் உடனடியாகக் கிடைக்கும்.
6 கட்டுமானத்தைக் கவனியுங்கள்!
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு என்றால், கட்டுமான நிறுவனம், குறிப்பளவு களின்படிதான் கட்டுமானத்தை மேற்கொள்கிறதா என்பதை அவ்வப்போது நேரில் சென்று கண்காணியுங்கள். சிமென்ட் மற்றும் மண் கலவை, கட்டுமான கம்பிகளின் தடிமனை மாற்றினால் கட்டத்தின் வலிமை குறைந்துவிடும். இவை எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதைத் திடீர் விசிட் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

7சதுர அடி விலை சரியா?
நம்மில் பலர் ஒரு சதுர அடிக்கான விலையை யார் குறைவாகச் சொல்கிறாரோ, அவரிடமே ஃப்ளாட் வாங்குகிறோம். அதுதான் லாபகரமாக இருக்கும் என நம்புகிறோம். ஒரு சதுர அடிக்கான விலையை அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் அமைந்திருக்கும் பொதுவான வசதிகளுடன் ஒப்பிட்டு வாங்குவதே சரியாக இருக்கும். மேலும், பில்டர் வீட்டை ஒப்படைக்கும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (யூடிஎஸ்), வழங்கப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவைகளை ஒரு சதுர அடிக்கான விலையோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும். (இது குறித்து நாணயம் விகடனில் வெளியான விரிவான கட்டுரையைப் படிக்க:http://nanayam.vikatan.com/index.php?aid=8459)
8 உயர் அடுக்கு அபார்ட்மென்ட்!
உயர் அடுக்கு அபார்ட்மென்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கும்முன், அதற்கான வழிகாட்டுதல்களின்படி கட்டடம் பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தீ தடுப்புச் சாதனங்கள், தீ விபத்தின்போது வெளியேறும் பகுதிகள், விசாலமான படிக்கட்டுகள் ஆகியவற்றைக் கட்டுமான நிறுவனம் ஏற்படுத்தித் தர வேண்டும். தர நிர்ணயங்களைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட பல உயர் அடுக்குக் கட்டடங்களில் ஏராளமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, உயர் அடுக்குக் கட்டடங்களைத் தேர்ந்தெடுக்கும்முன் போதுமான கவனத்துடன் செயல்படவும்.
9 காற்று, வெளிச்சம்!
தினசரி வாழ்க்கை யில் நல்ல காற்றோட்டமும் இயற்கை வெளிச்சமும் நம்  வாழ்க்கையை இனிமை யாக  மாற்றும். இயற்கை யான வெளிச்சம் மற்றும் நல்ல காற்றோட்டத்தினால்  கணிசமாக மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். உடல் ஆரோக்கியத்தையும் பேண முடியும்.
10 சமுதாயம், சுற்றுப்புறச்சூழல்!
பல்வேறு சமுதாயத் தினர் வாழும் குடியிருப்புத் திட்டங்களையே எப்போதும் தேர்ந்தெடுங்கள். பன்முகச் சமுதாய அமைப்பு குழந்தைகளுக்குப் பரந்த மனப்பாங்கை அளிக்கும். அந்த வகையில் அனைத்துப் பண்டிகைகள், விழாக்கள் போன்றவற்றை உங்களுடன் இருப்பவர்களுடன் கொண்டாடும் தருணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
நீங்கள் வீடு தேடும்போது மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டால், உங்கள் புது இல்லத்துக்கான தேடல் இனிதாக அமையும்