Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 7, 2015

மது உள்ளே.. மதி வெளியே..

ளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அடுத்த நாள் காலை தாங்க முடியாத தலைசுற்றல் ஏற்படும் என்பது 'குடிமகன்கள்’ அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தொடர்ந்து மது குடிப்பதால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகின்றன என்பது குறித்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் கருணாநிதி அளிக்கும் அதிர்ச்சிப் பட்டியல் இது...
பல்
அசிடிட்டி என்பது பற்களின் எனாமலை பாதிக்கக் கூடியவை. ஆல்கஹால் பானங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. மேலும் இதனுடன் சேர்க்கப்படும் குளிர்பானங்களிலும் அளவுக்கு அதிகமாகவே சர்க்கரை உள்ளது. இதனால் அசிடிட்டி அளவும் அதிகமாகி பற்களுக்கு பெரும்கெடுதலை ஏற்படுத்துவதோடு பல் ஈறையும் பாதிப்படையச் செய்யும். இது தவிர வாய் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
 வயிறு
ஆல்கஹால் குடலுக்கு உள்ளே சென்றதும் அதை ஜீரணிப்பதற்காக, அதிக அளவில் அமிலங்கள் சுரக்கின்றன. இது ஜீரண மண்டலத்துக்கு அதிகப்படியான வேலை. விளைவு... வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுவே தொடர்கதை ஆகும்போது, மிகமோசமான வயிற்றுப்புண், குடல் புற்றுநோய் போன்ற உயிருக்கே உலைவைக்கும் பேராபத்துக்களில் கொண்டுபோய்விடும். மேலும் இது கணையத்தையும் பாதிக்கச் செய்கிறது.
கல்லீரல்
மனித உடலின் தொழிற்சாலை கல்லீரல். அதிக அளவிலான ஆல்கஹால் கல்லீரலுக்குள் செல்லும்போது, அது கல்லீரல் திசுவைத் தாக்குகிறது. மேலும், நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிற கல்லீரலின் செயல்திறனையும் ஆல்கஹால் முடக்கிவிடுகிறது. இதனால், உடலின் வளர்சிதை மாற்றப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கல்லீரலின் உன்னதப் பணிகள் நிரந்தரமாகவே பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
இதயம்
ஆல்கஹால் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதயத் தசைகள் பலவீனம் அடைவதோடு, அதன் செயல்திறனும் கடுமையாகப் பாதிக்கப்படும். தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இது நிரந்தரப் பிரச்னையாகவே மாறிவிடும். மது அருந்தாதவர்களைக் காட்டிலும், மது அருந்துபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 6 மடங்கு அதிகரிக்கிறது.
இடுப்பு
ஆல்கஹாலில் மிக அதிக அளவாக ஒரு மில்லி கிராமுக்கு 7 கலோரி உள்ளன. ஒரு சிறிய கிளாஸ் அளவிலான மது அருந்தும்போது, தோராயமாக 130-க்கும் மேலான கலோரிகள் உடம்பில் சேரும்; அதுவே வெள்ளை ஒயினாக இருந்தால், 240 கலோரிகளுக்கும் மேல். தினமும் மது அருந்துபவர்கள் அதனுடன் நொறுக்குத் தீனிகளையும் உண்கிறார்கள். அளவுக்கு அதிகமான இந்தக் கலோரிகள் உடலில், கொழுப்பாக சேமித்துவைக்கப்படும். எனவே, உடல் எடை கூடி, இடுப்பு பெருத்து அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். தேவையற்ற இந்தக் கொழுப்புச் சதைகள்தான் பல்வேறு நோய்களுக்கான பிறப்பிடமாக இருக்கிறது.
மூளை
அளவுக்கு அதிகமாக மது குடிக்கும்போது அது சோம்பலைத் தூண்டுவதோடு, மன நிலை தடுமாற்றத்தையும் உண்டுபண்ணும். அதனால் விபத்து போன்றவை ஏற்படலாம். மது சோகமான மனநிலையை ஏற்படுத்தும். நினைவுத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். நாளடைவில், மீண்டும் நினைவு திரும்பாத வகையில், நரம்பு மண்டலத்தில் நிரந்தரப் பாதிப்பும் ஏற்படலாம்.
 குழந்தைப்பேறு
மது அருந்தும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்னை, கருத்தரிப்பதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். பெண்களுக்கு குழந்தைப்பேறு வாய்ப்பு பெருமளவில், குறைந்துவிடும்.
தோல்
சருமத்தைப் பல வகைகளிலும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது ஆல்கஹால். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் ஏற்படும். உங்கள் தோலுக்கு மிகவும் அவசியமான பி வைட்டமின் மற்றும் ஊட்டச் சத்துக்களை, ஆல்கஹால், செயல் இழக்கச் செய்துவிடுவதால்  மிக விரைவிலேயே முதுமைத் தோற்றம் கிடைத்துவிடும். முக்கியமாக 'சோரியாசிஸ்’ போன்ற தோல் நோய்களையும் ஏற்படுத்தும்.
- பா.பிரவீன்குமார்

No comments:

Post a Comment