Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 24, 2013

ஆந்திர ஊறுகாய்.. அமோக லாபம்



தினுசு தினுசாக வந்தாலும், நல்ல சுவை, தரம் உள்ள ஊறுகாய்க்கு என்றுமே கிராக்கி உள்ளது. தேடி வந்து வாங்குவார்கள். எலுமிச்சை, மாங்காய்,
நார்த்தங்காய் உள்ளிட்ட ஊறுகாய்களோடு, மருத்துவம் குணம்மிக்க புதுவகை ஊறுகாய்களை தயாரித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்Õ என்கிறார்கள் ஆந்திராவை சேர்ந்த சகோதரர்கள் சீனு மற்றும் ராஜூ. திருப்பூரில் 10 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் அவர்கள் கூறியதாவது: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, எங்கள் சொந்த ஊர். அங்கு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தோம். பகுதி நேரமாக ஊறுகாய் தயாரித்து விற்றோம். 10 ஆண்டுகளுக்கு முன் சேலத்தை சேர்ந்த நண்பர், எங்களைப் பார்க்க வந்தார்.
நான் தயாரித்த புதினா ஊறுகாயை ருசித்த அவர், ‘சூப்பர் டேஸ்டா இருக்கு. இதை எங்கள் பகுதியில் தயாரித்து விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்‘ என்றார்.



அடுத்த இரு மாதங்களில் நாங்கள் திருப்பூர் வந்து தொழிலை தொடங்கிவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக புதினா, பூண்டு, இஞ்சி, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், மாங்காய், பாகற்காய், நார்த்தங்காய் உள்ளிட்ட பலவகை ஊறுகாய்களை தயாரித்து வருகிறோம். இதில் சிறப்பானது புதினா ஊறுகாய். புதினா ஊறுகாய் ஆந்திராவில் பிரபலம். அதை சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிடுவோம். அந்த அளவுக்கு புதினா ஊறுகாய் ஆந்திர மக்களுக்கு பிடிக்கும்.

புதினா ஊறுகாய் பற்றி இங்குள்ளவர்களுக்கு அவ்வளவாக தெரியாததால், அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். இப்போது திருப்பூரில் எங்களின் புதினா ஊறுகாய் தான் பிரபலம். வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறோம். சிறிய பைகள், பாட்டில்களில் அடைத்து தினசரி 15 கிலோ விற்கிறோம். இத்தொழிலுக்கு பெரிய அளவு முதலீடு தேவையில்லை. தரத்தோடும், சுவையோடும் தயாரித்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

தனி இடம் தேவையில்லை. வீட்டு சமையலறையே போதும். பொருட்களை அரைக்க மிக்ஸி, 2 பிளாஸ்டிக் டப், ஒரு கிலோ கொள்ளளவு உள்ள பாட்டில்கள், 50, 100, 200 கிராம் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கவர்கள் தேவை. புதினா மற்றும் இதர பொருள்கள் மொத்த காய்கறி மார்க்கெட்டிலும், பாட்டில்கள் பழைய பாட்டில் வியாபாரிகளிடமும் குறைந்த விலையில் கிடைக்கும்.

முதலீடு குறைவு

வீட்டில் உள்ளவர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செய்யலாம். தினசரி 15 கிலோ ஊறுகாய் தயாரிக்கலாம். ஒரு கிலோ ஊறுகாய் தயாரிக்க தேவையான பொருட்களுக்கு ரூ.60 செலவாகும். தினசரி முதலீட்டு செலவு ரூ.900. மாதம் ரூ.27 ஆயிரம் வேண்டும்.பாட்டிலில் அடைத்து விற்றால் ரூ.80க்கு குறையாமலும், பாக்கெட்கள் மூலம் விற்றால் ரூ.110க்கு குறையாமலும் விற்கலாம். தினசரி குறைந்தபட்ச லாபம் ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை என மாதம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.22,500 வரை லாபம் பார்க்கலாம்.

சந்தை வாய்ப்பு

புதினா ஊறுகாய்க்கு நல்ல மவுசு உள்ளது. கடைகளுக்கும், வீடுகளுக்கும் சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். ஒருமுறை வாங்கியவர்கள், அடுத்து தானாகவே நம்மை தேடி வந்து ஆர்டர் தருவார்கள். உணவகங்களிலும் விற்பனை செய்யலாம்.

ஸ்பெஷல் புதினா ஊறுகாய்

ஒரு கிலோ புதினாவை சுத்தம் செய்து நறுக்கி, உப்பு 100 கிராம், மிளகாய், புளி தலா 25 கிராம், இஞ்சி, மல்லி, சீரகம் 2 டேபிள் ஸ்பூன் அளவு வீதம் சேர்த்து மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 300 மி.லி. நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி, இதை போட்டு தாளித்தால் நிமிடத்தில் புதினா ஊறுகாய் தயார். மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய் ஊறுகாய்களை போல, புதினா ஊறுகாய்க்கு ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

விதவிதமான ஊறுகாய் தயாரிப்பது எப்படி?

எல்லா வகையான ஊறுகாய்களையும் தயாரிப்பது எளிதுதான். பக்குவம் தவறிவிடக்கூடாது. சுவையில் மற்ற ஊறுகாயில் இருந்து வித்தியாசம் காட்ட வேண்டும். அப்போதுதான் மார்க்கெட்டில் நிற்கும்.

பூண்டு

வாணலியில் 400 மி.லி. நல்லெண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் கடுகு தாளித்து, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு கிலோ உரித்த பூண்டு போட்டு வதக்க வேண்டும். பூண்டு பொன்னிறமாக வதங்கியவுடன் தேவைக்கேற்ற உப்பு, 20 எலுமிச்சம்பழங்களின் சாறு ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். சாறு வற்றியவுடன் 300 கிராம் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறினால் பூண்டு ஊறுகாய் தயார்.

எலுமிச்சை

40 எலுமிச்சம்பழங்களை நன்றாக கழுவி, துண்டுகளாக வெட்டி, தேவையான அளவு உப்பு போட்டு ஒருநாள் முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் பகலில் வெயிலிலும், இரவில் மூடியும் வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய் 40, 2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து அவற்றை எலுமிச்சம்பழத்தோடு கலக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 2 நாள் மூடி வைக்க வேண்டும். இடை இடையே உலோகமில்லாத கரண்டியால் கிளறி வந்தால் எலுமிச்சை ஊறுகாய் தயாராகும்.

மாங்காய்

8 மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் 6 ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 ஸ்பூன் கடுகு தாளித்து, அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். அதில் 200 கிராம் மிளகாய்ப்பொடி, 4 பிடி உப்பு, ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 2 ஸ்பூன் பெருங்காயம், 2 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறினால் மாங்காய் ஊறுகாய் ரெடி.

நெல்லிக்காய்

8 பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, 2 ஸ்பூன் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 3 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய், 3 ஸ்பூன் உப்பு போட்டு கிளறினால் நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இதில் 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் கிளறியும் தயாரிக்கலாம்.

இஞ்சி, மிளகாய்

அரை கிலோ பச்சை மிளகாய், 200 கிராம் இஞ்சியை துண்டாக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து 10 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, 20 எலுமிச்சம்பழத்தின் சாற்றை ஊற்றி கலக்க வேண்டும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருங்காயம், 8 ஸ்பூன் கடுகு ஆகியவற்றைப் போட்டு தாளித்து அதில் இஞ்சி, மிளகாய் கலவையை போட்டு லேசாக கிளறினால் தயாராகிவிடும்.

No comments:

Post a Comment