Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 3, 2014

அள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்

விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள்...

ஆர்வமும் சிறிதளவு ஆதரவும் இருந்தால், அனுதினமும் நம் வாழ்க்கையில் ஆச்சர்யங்கள் அலங்கரிக்கும். பிடித்த துறையில், விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் உழைத்தால், அதற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும் என்கிறார்கள் தாரணியும், யாழினியும். இவர்கள் இருவரையும் விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள் என்றே சொல்லலாம். காரணம், ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப் படும் அப்ளிகேஷன்களை இவர்களே உருவாக்கி, மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பாதிக் கிறார்கள்.

 படிப்பை எளிமைபடுத்தும் ஆப்ஸ்கள்!
விருதுநகரில் இருந்தபடி பல அப்ளிகேஷன்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை  அறிய அவர்களைச் சந்தித்துப் பேசினோம். முதலில் இல்லத்தரசியாக இருக்கும் தாரணி சண்முகராஜனிடம் பேசினோம்.
“சின்ன வயதில் இருந்தே எனக்கு படிப்புமேல ஆர்வம் அதிகம். மாணவர்களுக்குப் படிப்பதை எளிமைப்படுத் தணும். இதுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யணும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். சமீபகாலமா ஸ்மார்ட்போன் பிரபலமா இருக்குறதால, இதன்மூலம் ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அந்த யோசனையில உருவானதுதான் இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம். இதுவரைக்கும் 13 அப்ளிகேஷன்களைத் தயார் செய்திருக்கோம்’’ என்று பெருமைபொங்கச் சொன்னார் தாரணி. மேற்கொண்டு அவரே பேச ஆரம்பித்தார்.
‘‘எங்களோட அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் மாணவர்களை மையப்படுத்திதான் இருக்கும். குறிப்பா, வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களோட நுழைவுத் தேர்வுகளை எளிமைப்படுத்துவதற்காகவும் நாங்க ஆப்ஸ் உருவாக்குகிறோம். ஜீஆர்இ (GRE) ஜீமேட் (GMAT), சேட் (SAT) போன்ற தேர்வுகளுக்கும் அப்ளிகேஷன்களை உருவாக்கி இருக்கிறோம்.
அப்ளிகேஷனை உருவாக்கும்போது, அவை  வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கணும். நாங்கள் உருவாக்கும் அப்ளிகேஷன்கள் அந்த வகையில் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு பலமுறை சோதித்துப் பார்த்தபின்பே, அதை மற்றவர்கள் பயன்படுத்தத் தருவோம்’’ என்றவர், அவர் உருவாக்கும் ஆப்ஸை வடிவமைக் கும் டிசைனரான யாழினியை அறிமுகப்படுத்தினார். தாரணியின் கணவரின் தங்கைதான் இந்த யாழினி. பிஎஸ்ஜி கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.Sc-Computer Science) படித்துவிட்டு,  புராடக்ட் டிசைனில் முதுகலைப் படிப்பும் படித்த யாழினியுடன் பேசினோம்.
 டிசைனர் யாழினி!
‘‘ஆரம்பத்துல நாங்க தயாரிச்ச அப்ளிகேஷன்களுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்துச்சு. இதனால வருமானமும் சொல்லிக்கிறமாதிரி கிடைக்கலை. நம் முயற்சியின் மீது நாம் நம்பிக்கை வைக்கணும். அப்போதுதான் முன்னேற்றத்துக்கான பாதை எளிமை யாகும்னு தொடர்ந்து உழைக்க ஆரம்பிச்சோம். நாள் ஆக ஆகத்தான் படிப்படியா வரவேற்பு அதிகமாச்சு. 
 
எங்கள் அப்ளிகேஷனை பயன்படுத்தி னவங்க கொடுத்த ஆலோசனைதான் எங்களை இப்போ எல்லோருக்கும் அடையாளப்படுத்தி இருக்கு. அவர்கள் கொடுத்த ஆலோசனையை வச்சுதான் பல்வேறு யுத்திகளை ஆப்ஸ் தயாரிக்கும் போது பயன்படுத்தினோம். அவங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இன்னும் புதிய புதிய அப்டேட்களைக் கொடுத்தோம்.
 வருமானம் ரூ.60 ஆயிரம்!
கூகுள் ஆட் சென்ஸ் (Google Ad Sense) என்கிற தளத்தில் எங்கள் அப்ளிகேஷனை விளம்பரம் செய்தோம். ஆரம்பத்தில் மாத வருமானம் 5,000 ரூபாய் அளவுக்குதான் இருந்தது. கூகுளில் சர்ச் செய்யும்போது பல விளம்பரங்கள் வரும். அதுபோல எங்கள் அப்ளிகேஷனில் விளம்பரங்கள் டிஸ்பிளே ஆவதன் மூலமா, சமீப காலமா எங்களால் மாதம் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுது. இதுவரை ஆறு லட்சம் வாடிக்கை யாளர்கள் எங்கள் அப்ளிகேஷனை பயன்படுத்திகிட்டு இருக்காங்க’’ என்று சொன்னார் மகிழ்ச்சி பொங்க.
‘‘இப்ப புதுசா நாங்க குழந்தை களுக்காகவும் அப்ளிகேஷன்களை உருவாக்கினோம். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கு. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு உறுதுணையா அப்ளிகேஷன் இருந்தா நல்லாருக்கும்னு வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு மெயில் வந்துருக்கு” என்று சந்தோஷமாகச் சொன்னார் யாழினி.
தாரணி - யாழினி கூட்டணியில் உருவான 13 அப்ளிகேஷன்களில் 11 அப்ளிகேஷன்கள் கூகுள் ஆண்ட்ராய்டு தளத்துக்காகவும், 2 அப்ளிகேஷன்கள் ஆப்பிள் நிறுவனத்தோட ஐஓஎஸ் தளத்துக்காகவும் உருவாக்கித் தந்திருக் கிறார்கள்.
 கடந்து வந்த பாதை!
இந்த வெற்றியை சுவைக்க அவர்கள் பட்ட கஷ்டங்களைச் சொன்னார் தாரணி. “ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தபோது, எங்கள் ஆர்வம் குறையலை. நாங்க முதல் அப்ளிகேஷன் தயாரிக்கும்போது எனக்கு ஐந்து மாதத்துல குழந்தை இருந்துச்சு. குழந்தையையும் கவனிச்சுட்டு, அப்ளிகேஷன் டெவலப் பண்றது கஷ்டமா இருந்தாலும் விடாம முயற்சி செஞ்சதாலதான் இப்ப இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.  

யாழினியும் அப்ளிகேஷனை டெவலப் செய்வதற்காகத் தினமும் ஆறு மணி நேரம் வேலை பார்ப்பாங்க. கடின உழைப்புக்குப் பிறகுதான் நிறைய விளம்பர ஏஜென்சிகள் மூலமா எங்களுக்கு வாய்ப்புகள் வந்துச்சு. கூகுள் டெவலப்பர் கன்ஸோல் (Google developer Console) என்ற தளத்தில் பதிவு செய்ததாலயும், அதிக வாய்ப்புகள் வந்துச்சு.
இன்னும் கொஞ்ச நாள்ல புதுசா ஒரு நிறுவனம் ஆரம்பிக்க இருக்கிறோம். அந்த நிறுவனத்தோட பெயர் பப்பில் தாட்ஸ் (Bubble Thoughts). கூடிய விரைவில் நாங்கள் தொழிலதிபர் ஆகவேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்று சொல்லும்போது இருவர் முகத்திலும் பளிச் சந்தோஷம்.
சமையல் முதல் சாஃப்ட்வேர் வரை தங்கள் முத்திரையைப் பதித்துவரும் இன்றைய தலைமுறை பெண்களுக்கு இந்த தாரணியும் யாழினியும் சிறந்த உதாரணம். 

No comments:

Post a Comment