Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 5, 2014

நல்ல வருமானம் தரும் கீரை சாகுபடி


கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
1. எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
2. எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது. மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும். இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம். வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம். எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது. அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும். கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது. இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம். கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள். குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கீரை சாகுபடி : சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம். ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம். ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000. எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10. கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது. கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள். குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை. அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை. சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள். ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம். கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.
முள்ளங்கி சாகுபடி: கீரை சாகுபடி செய்பவர்கள் முள்ளங்கியையும் சாகுபடி செய்கிறார்கள். 5 சென்ட் நிலத்தில் 300 கிலோ மகசூல் கிடைக்கும். முள்ளங்கியின் மதிப்பு ரூ.3,000. சாகுபடி செலவு ரூ.500 போக நிகர லாபமாக ரூ.2,500 கிடைக்கும். இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயிகள் மறுபடியும் கீரை சாகுபடிக்கு உபயோகிக்கின்றனர்.

- எஸ்.எஸ்.நாகராஜன்


No comments:

Post a Comment