Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 3, 2014

2013 டாப் 10 பிரச்னைகள் - தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு



மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அமைதியான சூழலை உருவாக்கித் தருவதுதான் சட்டம் ஒழுங்கின் அடிப்படை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, கடந்த ஆண்டும் ஒரு பெரிய விடுப்பில் சென்றுவிட்டதுபோல் இருக்கிறது!
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவை ஒட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, வட மாவட்டங்கள் வன்முறைப் பூமியானது. பேருந்துகளுக்குத் தீவைப்பு, கல் எறிதல் எனப் பெரும் பதற்றம் நிலவியது. விழுப்புரம், செங்கல்பட்டு பிராந்தியங்களில் பேருந்துப் பயணம் மேற்கொள்வதே பெரும் சவாலாக அமைந்தது!

கடந்த ஆண்டு பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் கொல்லப்பட்டனர். நாகப்பட்டினம் புகழேந்தி, வேலூர் டாக்டர் அரவிந்த், பரமக்குடி முருகன் என அந்தப் பட்டியல் நீண்டது. இந்தக் கொலைகளை அடுத்து யூகங்களின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால்,  'சொந்தக் காரணங்களுக்காகவும், கொடுக்கல் - வாங்கல், ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவுமே அந்தக் கொலைகள் நடந்துள்ளன’ என விசாரணைக்குப் பிறகு தமிழக டி.ஜி.பி. அறிவித்தார்.
ஆந்திராவின் புத்தூரில் தீவிரவாதிகளை போலீஸார் பிடித்த செய்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. அவர்களைப் பிடித்த தமிழகக் காவல் துறையினருக்கு விருதுகளும் சன்மானங்களும் வழங்கப்பட்டன. புத்தூரில் அல்ல, அதற்கு முன்னரே காவல் துறையினர் அவர்களைக் கைது செய்துவிட்டனர் என்றும் உண்மை அறியும் குழு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பத்து மணி நேரத் துப்பாக்கிச் சண்டை நடந்த நெருக்கடியான தெருக்களில் ஒரு துப்பாக்கித் தோட்டாவின் சுவடுகூட எந்தச் சுவறிலும் இல்லை. 'தீவிரவாதிகள்’ என்று கொல்லப்பட்டவர்களுடன் தமிழகக் காவல் துறையினர் சிரித்துப் பேசி மகிழும் புகைப்படங்களும் வெளியாகின.
சென்னையில் ஒரு மருத்துவரை சாலையில் வைத்து இருவர் வெட்டிக் கொன்றனர். சி.சி.டி.வி-யில் பதிவான அந்தக் கொலைக் காட்சி சில தினங்கள் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டே இருந்தன. பழிக்குப்பழி, நடுவீதியில் கொலை என்பதெல்லாம் தமிழ் சினிமாவைப் போலவே, தமிழர் வாழ்விலும் ஒரு வாழ்முறை அம்சமாக மாறி வருகின்றன. சென்னையில் அற வழியில் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்த விழித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச் சென்று சென்னைக்கு வெளியே எங்கோ 80 கி.மீ. தூரத்தில் இறக்கிவிட்டு வந்த செயல், ஒரு நாகரிக சமூகம் என்று நாம் நம்மை எப்படி அழைத்துக்கொள்வது என்ற கேள்விகளை ஆழமாக எழுப்பியது.
சிவகங்கை அருகே பாப்பன்குளத்தில் சுதந்திரத் தினத்தன்று காவல் துறையினர் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் சென்று அங்கிருந்த தலித்களின் 28 வீடுகளை இடித்து நொறுக்கி, அவர்களை நான்கு நாட்கள் ஊரைவிட்டு வெளியேறவிடாமல் சுற்றி வளைத்துச் சிறை வைத்தனர். இன்று வரை பாப்பான்குளம் மக்கள், மழைக்கும் வெயிலுக்கும் வானத்தைக் கூரையாக்கி நாட்களைக் கடத்திவருகிறார்கள்.
இப்படி... சட்டம்-ஒழுங்கு தறிகெட்டுக் கிடக்க, ஒரு சம்பவத்தில் மட்டும் தமிழகக் காவல் துறை தாங்கள் ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். முன்னாள் டி.ஜி.பி. வீட்டு முருங்கை மரத்தில் யாரோ கீரை திருடிவிட்டார்கள் என்று, அந்தக் கீரைத் திருடனைப் பிடிக்க 10 காவலர்கள் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது. இருவர் கைதுசெய்யப்பட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த அவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை அதிகபட்ச சிறைத் தண்டனை கிடைக்க சாத்தியம் உள்ள (இந்தியத் தண்டனை சட்டம் 385- அச்சுறுத்தித் திருட முயற்சித்தல்) பிரிவில் கைதுசெய்யப்பட்டனர். முருங்கைக்கீரை திருடுவது அவர்களின் வாழ்க்கை லட்சியமா என்ன?
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 3,231 கொலைகள் நடந்துள்ளன என்று குவியும் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சி. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்குப் பராமரிப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் காலம் வரும் என்றால், அதுதான் தமிழகத்தின் பொற்காலம்!''
விகடன்

No comments:

Post a Comment