Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 3, 2014

2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு

இந்த ஆண்டு மட்டுமல்ல, எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு மின்வெட்டுதான் தமிழகத்தின் தலையாயப் பிரச்னையாக இருக்கும். வறுமைக்கோடு போலவே, மின்சாரப் பற்றாக்குறைக் கோடும் இனி நிரந்தரம்தான். இது எதிர்மறைப் பார்வை அல்ல... 
யதார்த்தமே இதுதான்.
 தமிழ்நாட்டின் மின் தேவை 12,000 மெகாவாட். இதில் மூன்றில் ஒரு பங்கான 4,000 மெகாவாட், இப்போது பற்றாக்குறை. ஆண்டின் மூன்றில் ஒரு பகுதிக் காலத்தில் பருவக்காற்று வீசுகிறது. அப்போது தமிழகம் மின் மிகை மாநிலம். ஆண்டில் மூன்றில் ஒரு பங்கான கோடையில் மின் பற்றாக்குறை. மூன்றில் ஒரு பங்கான மழை, பனிக்காலத்தில் மின் பற்றாக்குறை.

 சுய உற்பத்தி, மத்தியத் தொகுப்பு, தனியாரிடம் கொள்முதல்... என மூன்று சம பங்குகளாகப் பெறப்படும் மின்சாரமே, மாநிலம் முழுக்க அனைத்துத் தேவைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
 தமிழக அரசின் மொத்தக் கடன் சுமார் 1,30,000 கோடி ரூபாய். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன், இதில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது சுமார் 40,000 கோடி ரூபாய்.
- மின்வெட்டுச் சிக்கலைப் பற்றி சிந்திக்கும்போது இந்த 'மூன்றில் ஒன்று’ கணக்கு மனதில் வந்துபோனது. ஆனால், தமிழ்நாடு மின் வாரியம் ஒன்றும் சோடையான நிறுவனம் அல்ல!
1985-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்து நாட்டின் சிறந்த உற்பத்தித் திறனுக்கான பரிசை தமிழக அனல்மின் நிலையங்கள் (எண்ணூர் அனல்மின் நிலையம் தவிர்த்து) பெற்றுவருகின்றன. நாட்டின் மொத்தக் காற்றாலை மின் உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. 'தானே’ புயல் சீரழித்த ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் ஒரே மாதத்தில் சரிசெய்தவர்கள் நம் மின்வாரியத் தொழிலாளர்கள். விற்கப்படும் மின்சாரத்துக்கான விலையை முழுமையாக வசூலிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளின் மின்இழப்புக் குறியீடான 10 சதவிகிதத்துக்கு நெருக்கமாக 12.5 சதவிகித மின் இழப்பு உள்ள நகர்ப் பகுதிகள் நம்முடையவை. இப்படிப் பல மெடல்களைத் தாங்கி நின்ற தமிழக மின்சார வாரியத்தின் கோட்டு, இன்று பொத்தல் பொத்தலாகக் கிழிந்து தொங்குகிறது.
2008-ம் ஆண்டு தொடங்கிய மின்வெட்டுக்கு இன்று வயது ஐந்து. தமிழகத்தை ஆண்ட இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகளாக மின்வெட்டைப் பேணிப் பராமரித்துள்ளன. மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அரிய வாய்ப்பு 2012-ல் இருந்தது. கட்டுமானப் பணி முடியும் தருவாயில் இருந்த வடசென்னை 1,200 மெகாவாட், மேட்டூர் 600 மெகாவாட், வல்லூர் 1,041 மெகாவாட், தூத்துக்குடி 387 மெகாவாட், நெய்வேலி 225 மெகாவாட்... எனக் கிட்டத்தட்ட 3,300 மெகாவாட்டுக்கு மேலான சுய உற்பத்தித் திறனை முடுக்கிவிட அரசு முயலவே இல்லை.
ஆண்டுக்கு 1,000 மெகாவாட் அளவுக்கு மின் தேவை அதிகரித்துவரும் நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் மின் பற்றாக்குறை 7,500 மெகாவாட்டாக வளர்ந்து நிற்கும். அப்போது தனியாரிடம் கொள்முதல் செய்வது மட்டுமே அரசுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. துயரம் என்னவெனில், அந்த அளவுக்கான நிதி ஆதாரம் அரசிடம் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. இந்த ஆண்டு, தனியாரிடம் வாங்கும் மின்சார விலையை ஈடுகட்ட, மின் கட்டண மானியமாக 5,197 கோடியை ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த காலங்களில் மின்சாரக் கட்டமைப்பு மூலதனமாக ஒதுக்கப்பட்ட அந்த நிதி, இன்று மின் கட்டண மானியமாக ஒதுக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தனியார் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே இருக்கும். மின்சாரத்துக்கு அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை வரும். அது எளியோரிடம் இருந்து மின்சாரத்தைப் பிடுங்கி பணம் உள்ளோருக்கு மட்டும் வழங்கும். அப்போது நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும், குளிர்சாதனப் பெட்டிகளும் வெறுமனே காட்சிப் பொருள்களாக மாறிவிடும். இது அடிப்படை இல்லாத கட்டுக்கதை அல்ல. ஒரு புள்ளிவிவரம் பார்த்தால் இது புரியலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 89 லட்சம் வீடுகள், ஆண்டுக்கு 5,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால், வெறும் 4.30 லட்சம் வீடுகள் 4,300 மில்லியன் யூனிட்களைப் பயன்படுத்துகின்றன. 89 என்பது, பெரும்பான்மை ஏழை மக்களைக் குறிக்கிறது. 4.3 என்பது, வசதியானவர்களைக் குறிக்கிறது!''
விகடன்

No comments:

Post a Comment