Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 10, 2013

அபாய அறிகுறிகள்


சர்க்கரை நோய்க்கும் பிற நோய்களுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உண்டு. மற்ற நோய்களுக்கு அறிகுறிகள் வெளியே தெரியும். அவற்றை வைத்து குறிப்பிட்ட நோய் வ்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஆனால், சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அந்த நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரியாது. இதனால், தங்களுக்கு நோய் இருப்பதையே பலரால் அறிந்துகொள்ள முடிவதில்லை.


நோயானது முற்றி உள் உறுப்புகளைப் பாதிக்கும் போதுதான் இதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். அந்த நிலையில் சிகிச்சை எடுத்துகெபபண்டாலும் அதனால் பெரிய பலன்ள் கிடைப்பதில்லை. எனவே, ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. எந்தெந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என்தைப் பார்ப்போம்.
அதிகப்படியான தாகமும், சிறுநீர்ப் பெருக்கும்
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்போது சிறுநீரகத்தால் அனைத்து சர்க்கரையையும் வடிகட்டி முடிவதில்லை-. ரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரை தன்னுடன் நீர்ச்சத்தையும் கொண்டு செல்லும். இதனால்தான், சர்க்கரை நோயாளிகளுக்கு அதிப்படியான தாகம் ஏற்படுகிறது. அவ்வப்போது சிறுநீர்ப் பெருக்கும் ஏற்படுகிறது. உடல் திசுக்களிலிருந்து சர்க்கரையால் நீர இழுத்துக் கொள்ளப்படுவதால்தான் அபரிதமான தாகம் ஏற்படுகிறது.

உடல் அசதியும், சோர்வும்:
உடலின் முக்கிய எரிபொருளாக விளங்குவது சர்க்கரை, ஆனால், அவை செல்களுக்குத் தேவையான சக்தியாக மாற்றப்படாத நிலையை சர்க்கரை நோய் உருவாகி விடுகிறது. செல்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் போவதால் எப்போதும் களைப்ப்£கவும், சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்க நேரிடுகிறது.

குறை எடையும், மிகை எடையும்:
குளுக்கோஸ் இழப்பை ஈடுசெய்வதற்காக உடல் தொடர்ந்து போராடுவதால் அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். சிலருக்கு இது எதிர்மாறாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டாலும் எடை குறையும். இந்தநிலை, டைப்&1 சர்க்கரை நோயின் போது பரவலாகக் காணப்படும்.

காயம் ஆறாத நிலை:
ரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருந்தால் இயல்பாக காயத்தை ஆற்றும் உடலின் தன்மையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இதனால், காயங்கள் எளிதில் ஆறாது. தவிர, திசுக்கள் மிகவும் மென்மையாக மாறிவிடுவதால் நோய்த் தொற்றும் அதிகரிக்கும். உடலில் இயல்பாகவே உள்ள குணப்படுத்தும் திறனை சர்க்கரை நோய் குறைத்துவிடுகிறது.நோய்த் தொற்றை எதிர்க்கும் சக்தியையும் தடைசெய்து விடுகிறது. இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப்பை, பிறப்புறுப்புப் பகுதிகளில் அவ்வப்போது நோய்த்தொற்று ஏற்படுவது சர்வ சாதாரணம். தோல் பகுதியிலும் கிருமிகள் எளிதில் தாக்குதல் நடத்தும். ஆண் & பெண் இருவருக்குமே பிறப்புறுப்புப் பகுதியில் கொப்புளங்கள் தோன்றும். சருமம் வறண்டு நமைச்சலுடன் இருக்கும்.

ஈறு மற்றும் பற்களில் ஏற்படும் பாதிப்பு:
ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை, வாயில் உள்ள ஈறுகளை வலுவிழக்கச் செய்து நோய் எதிர்ப்புத் திறனையும் குறைத்துவிடுகிறது. இதனால் ஈறுகளில் மட்டுமின்றி தாடை எலும்புகளிலும் நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்படுகின்றன. இதன் காரணமாக வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக்கசிவு, மற்றும் சீழ் பிடித்தல், பற்கள் ஆடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.நாள்பட்ட சர்க்கரை நோயால் நரம்புகள் வலுவிழந்து போகும். இது எண்ணற்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிகமாகக் காணப்படும் அறிகுறிகளாக, கை கால்கள் மரத்துப்போவதையும், அந்தப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதையும் சொல்லலாம். இதனால் கால்களிலும், பாதங்களிலும், கைகளிலும் எரிவது போன்ற உணர்வு இருக்கும்.
உணவு செரிமானத்தைத் துரிதப்படுத்தும் நரம்புகள் சேதமடைவதால் எப்போதும் குமட்டல் உணர்வு, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவை இருக்கும்.

கண் பிரச்னைகள்:
ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை, கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ்களின் ஹைட்ரேஷன்களைத் தாக்கி சேதப்படுத்திவிடுகின்றன. இதனால் பார்வைக் குவியம் தடைபடுகிறது. சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையைச் சரிப்படுத்திவிடலாம்.நாள்பட்ட சர்க்கரை நோய் இருந்தால் கண்களில் உள்ள நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். நரம்புகளில் தோன்றும் ரத்த ஒழுக்கினால் எந்தஅறிகுறியும் தெரியாது என்றாலும், கண்களில் கருப்பு நிறப்புள்ளிகளும், சில சமயம் பார்வை இழப்பு ஏற்படும்.

சர்க்கரை நோயால் ஏற்படும் கிக்கலான பிரச்னைகள்
சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளா விட்டால் பெரிய மற்றும் சிறிய ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைகின்றன. இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு ஆணிவேர். ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், சரியான ரத்த ஓட்டம் உடல் உறுப்புளுக்குக் கிடைக்காமல் ஒவ்வோர் உறுப்பும் பாதிப்புக்குள்ளாகிறது. குறிப்பாக, சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலழிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு ரத்த நாள பாதிப்புகளே முக்கியக் காரணமாக அமைகின்றன.ரத்த நாளங்கள் பாதிப்படைவது ஒருபுறமிருக்க, ரத்தக் குழய்கள் சுருங்கிவிடும் பிரச்னையும் இந்த நோயால் உண்டாகிறது. பொதுவாக, சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில், இன்சுலின் சுரப்பு இருந்தாலும்கூட அது முழுமையாக வேலை செய்யாது. இதனால், கல்லீரலில் கொழுப்புச் சத்து பிரிக்கப்படும் செயல்பாட்டில் சிறிது சிறிதாகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, கெட்ட கொழுப்புகள் அப்படியே ரத்தத்தில் படிய ஆரம்பித்துவிடும்.

இந்தக் கொழுப்புகள், பற்களின் மீது படியும் மஞ்சள் நிறக் கறைகளைப் போல், ரத்தக் குழாய்களின் சுவரிலும் படிந்து, குழாய்களின் உள் சுற்றளவைக் குறைத்துவிடும். நாளடைவில் அந்த வழியே ரத்தப் போக்குவரத்து சரியாக நடக்காத அளவுக்கு ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடும்.இவ்வாறு ரத்தக் குழாய்கள் சுருங்குவதால், அந்தக் குறுகிய பாதையின் வழியே ரத்தம் பாயும் போது ரத்த அழுத்தம் அதிகமாகும், இதயப் பிரச்னைகள் உருவாவதால் அடிக்கடி நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கும். சில சமயம் திடீரென மாரடைப்பும் வரலாம்.

காயம் ஏன் ஆறுவதில்லை?
பொதுவாக, இதயத்துக்கு அருகில் உள்ள உறுப்புகளில் காயம் பட்டால், அது கொஞ்சம் விரைவாக ஆறிவிடுவது உண்டு. ஆனால், இதயத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கால் பகுதியில் காயம் பட்டால் ஆறுவதற்குக் காலதாமதமாகும்.இதற்கு என்ன காரணம் என்றால், அதிக சர்க்கரையால் ரத்த நாளங்கள் சுருங்கிவிடுவதால், காலுக்கு சரியான ரத்த ஓட்டம் இருக்காது. இதயம் சுருங்கி விரியும் செயல்பாட்டினால் வெளியேறும் ரத்தம், நீண்ட தொலைவில் உள்ள கால்களுக்குப் பயணித்து அந்தப் பகுதியை முழுமையாக அடையாது.தவிர, காயம் பட்ட இடத்தில் அதிகமான சர்க்கரை இருக்கும். ஆனால், ரத்தத்தில் காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். குறிப்பாக, வெள்ளை அணுக்கள் சரிவர செயல்படாத நிலை உண்டாகிவிடும். இதனால்தான் இத்தகைய பிரச்னைகள் வருகின்றன.

காயம் ஆறாத பட்சத்தில் அதைச் சுற்றி சிவப்புப் புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். கிருமிகள் தொடர்ந்து அதன் வழியாகத் தொற்றுவதால் காயம் அழுகவும் ஆரம்பிக்கும். இதனால்தான் நோயாளிகளுக்குக் காலில் அடிபட்டால் விரைவில் ஆறுவதில்லை.இப்படிப்பட்ட பிரச்னைகள் வரக்கூடாது என்பதால்தான், சர்க்கரை நோயாளிகள் நகத்தைக் கூட ஒட்ட வெட்டக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள். நகத்தை வெட்டப்போய், கொஞ்சம் சதையை வெட்டிக்கொண்டால்கூட அது ஆறாமல் புரையோடிப் போய்விடும். இறுதியில் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும்.

கால்களுக்கு ஏற்படும் பாதிப்பு:
காலின் நுனிப்பகுதியில் எரிவது போன்ற உணர்ச்சி, சுருக் சுருக் எனக் குத்தும் உணர்வு, உணர்ச்சியின்றி மரத்துப் போதல், தரையில் நடந்தாலும் பஞ்சின் மீது நடப்பது போன்ற உணர்வு போன்றவை இருக்கும். இந்த நிலைக்கு வந்துவிட்ட நோயாளிகளால், கால் இடறி கீழே விழுந்தாலோ அல்லது எதிலாவது இடித்துக் கொண்டாலோ கூட தாங்கள் காயப்படுவதை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.எனவே, நடக்கும்போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும். காலில் நகங்கள் வளர்ந்தால் மேலோட்டமாக வெட்டி எடுக்க வேண்டும். அதேசமயம், காலில் தசைகள் வர்ந்தால் அவற்றை நீங்களாக வெட்டியெடுக்காமல், மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.

காலில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, கொசு, கரப்பான், எலி போன்றவை கடிக்க இடம் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இறுக்கமான, கால்களைக் கடிக்கும் காலணிகள் அவிதைத் தவிர்த்துவிடுங்கள். ரத்த நாளங்களைச் சுருங்கவைக்கும் புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றைத் தவிருங்கள்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, கூடுதலான குளுக்கோஸ் பொருளானது சக்தியாக மாற்றப்படாமல் 'சார்பிடால்’ என்ற வேதிப் பொருளாக மாறும். இது கால் நரம்புகளில் அதிகமாக இருக்குமானால் காலின் உணர்ச்சி குறையத் தொடங்கும். இரவில் படுக்கும்போது பாதத்தில் எரிச்சல், ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும். தவிர, தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு, கால் குடைச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.

கால்களில் உணர்ச்சி மாற்றங்கள் அவ்வப்போது வரும் நிலையிருந்தால் அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயால் சிறுநீரகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்
சர்க்கரை நோய் ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளாகிற முதல் உறுப்பு சிறுநீரகம்தான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் சுத்தரிக்கப்படும்போது சிறுநீரகத்தில் இருந்து மிகக் குறைந்த அளவு புரதச் சத்து வெளியேறும். இதனால், உடலின் சமச்சீர் நிலை குறையும். இதை ஆரம்ப நிலையிலேயே மைக்ரோ ஆல்புமின் பரிசோதனை மூலமாகக் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.சிறுநீரில் புரதச் சத்து அதிகமாக வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் பிரியும். மிகை ரத்த அழுத்தம் ஏற்பட்டு பிற உறுப்புகளும் பாதிக்கலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் இந்த நிலை வெளியே தெரியவரும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் அதிகமான புரதம் வெளியேறி விடுவதால் உடல் பருத்தும், கை கால்கள் வீங்கியும் காணப்படும்.
கடைசி நிலையாக சிறுநீரகம் செயலிழந்துவிடும். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட நபர், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, சிறுநீரகத்துக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

சிறுநீரகம் எப்படி செயலிழக்கிறது?
சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். சர்க்கரை நோயின் காரணமாக கூடுதல் பணியைச் செய்யவேண்டியிருப்பதால் நாளடைவில் சிறுநீரகம் தளர்வடைந்து சரியாக சுத்திகரிப்புப் பணியைச் செய்ய இயலாது. தவிர, ரத்தத்தில் யூரியாவில் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகத்தில் உள்ள சிறுநீர் வடிக்கட்டிகள் அதைச் சரியாகச் சுத்திகரிக்காமல் விட்டுவிடுகின்றன. இதனால் கழிவுப் பொருள்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இந்த நிலையில்தான் நிறைய பேருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கிறது.

40 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயாலும், 20 சதவீதம் பேருக்கு மிகை ரத்த அழுத்தம் காரணமாகவும் நிரந்தரமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது.
ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்படாமல் இருந்து வந்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பது தெரியும். தொடர்ந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதற்கு டயாலிசிஸ் செய்யவேண்டி இருக்கும்.இதனால்தான், சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்ததுமே, சிறுநீர்ப் பரிசோதனை செய்து 'ஆல்புமின் யூரியா’ என்ற புரதப் பொருள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
சிறுநீரில் ஆல்புமின் யூரியாவின் அளவு முப்பது மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால் சர்க்கரை நோயால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும் பெறவேண்டும்.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரை:
கர்ப்பக் காலத்தில் பொதுவாக ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். தாயின் உடலில் ரத்த அளவும் அதிகரிக்கும். இந்த அளவை ஈடுசெய்வதற்காக அதிகமான இன்சுலினை கணையம் சுரக்க வேண்டியிருக்கும்.இந்தச் செயல்பாட்டில் குறைபாடு தோன்றி கணையம் போதுமான இன்சுனை சுரக்காவிட்டால் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இவ்வாறுதான் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் தோன்றுகிறது. இதைப் பரிசோதனை செய்யாவிட்டால் தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாது. குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். கர்ப்பக் காலத்தில் சுமார் பதினேழு பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.கருத்தரித்த காலத்தில் சர்க்கரை நோய் இருந்து குழந்தை பிறக்க நேரிட்டால் குறைப்பிரசவம், அதிக எடையுடன் குழந்தை பிறத்தல், பயிற்றிலோ அல்லது பிறந்த உடனோ குழந்தை இறந்துவிடுதல், பிறவியிலேயே ஊனமாகப் பிறத்தல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரைப் பரிசோதனை:
ஒவ்வொரு மாதமும் பெண்ணின் கருவளர்வதால் தாய்க்கு அதிக ஊட்டம் தேவைப்படுகிறது. ரத்த அளவும் அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கிறது-. எனவே மூன்று மாதத்துக்கு ஒருமுறை என குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.குறிப்பாக, கர்ப்பம் தரித்த பதினாறாவது வாரம் (நான்காவது மாதம்), இருபத்து நான்காவது வாரம் (ஆறாவது மாதம்), முப்பத்திரண்டாவது வாரம் (எட்டாவது மாதம்) ஆகிய காலங்களில் கண்டிப்பாக ரத்தச் சர்க்கரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தில் ஊசி மருந்து போடக் கூடாது என கூறப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இன்சுலின் ஊசி குழந்தைக்கு எந்தவித சோதத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்சுலின் ஊசி மருந்து எடுத்துக்கொள்வதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், மாத்திரை எடுத்துக் கொள்வதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.கர்ப்பிணிப் பெண்களுக்கென எல்லா மருத்துவமனைகளிலும் உணவுத் திட்டம் இருக்கும். திட்டமிட்ட உணவு முறையால் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கலாம். இனிப்புப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடுவதைப்போல், உணவைப் பிரித்துக்கொண்டு சாப்பிட்டுப் பழக வேண்டும்.ஒரு குழந்தையைச் சுமக்கும்போது தாய்க்குச் சர்க்கரை நோய் இருந்தால், அடுத்த குழந்தையைச் சுமக்கும்போதும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.முதல் குழந்தையைச் சுமக்கும்போது சர்க்கரை இல்லாமல் இரண்டாவது குழந்தையைச் சுமக்கும்போது கூட சர்க்கரைப் பிரச்னை உண்டாகலாம். சில பெண்கள், பிரசவத்துக்குப் பிறகு உடல் நலன் மீது அக்கறை காட்டுவதில்லை. இதனால் உடற்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சர்க்கரை நோயுன் வந்துவிடுகிறது. ஆகவே, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொண்டு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் பிரச்னைகள் பற்றி விளக்கமாகப் பேசியாகிவிட்டது. இந்த நோய்க்கான காரணங்களையும், பரிசோதனை முறைகளையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment