Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 11, 2013

என் அரசியல் களம்- உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்!!

அரசியலில் இங்கு எனது நிலைப் பாட்டினை விவரித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க என்னைச் சார்ந்தது. சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும்....

உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்…பாகம்1

October 28, 2013 at 3:21pm
என்அன்பு உடன் பிறப்புகளே!
1967 ல் தி.மு.க வை அரியணை ஏற்றி அழகு பார்த்தவர்களில் எமக்கும் பெரும் பங்குண்டு என்ற உரிமையோடும், அது எம் கடமையென்ற எண்ணத்தோடும் உங்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் இது. நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. நாற்பதும் நமக்கே என்று மீண்டும் சரித்திரம் படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
உறக்கம் கலைவோம். சலிப்பு வேண்டாம். அனைவரும் ஒன்று கூடி நமக்குள் ஏற்பட்ட சிறு சிறு சச்சரவுகளை மறந்து உழைக்க வேண்டிய தருணமிது.
இத் தேர்தலில் நாம் கட்டாயம் 40 இடங்களையும் வென்றிட வேண்டும் என்ற உயிர் துடிப்புடன் இது ஒன்றே நம் சிந்தனை செயல் என்ற உயிர் மூச்சாய் பணியில் இறங்க வேண்டும். அதற்கு இம் முக நூலை நாம் முடிந்த அளவு பயன் படுத்திக் கொள்வோம். இன்றைய தொழில் நுட்பத்தை ஆக்கப் பூர்வமாக பயன் படுத்திக் கொள்வோம். இங்கு இடப்படும் பதிவுகள் அனைத்துமே வரப் போகும் தேர்தலை முன்னிறுத்தியே இருக்க வேண்டும். இங்கு வரும் பதிவுகள் அனைத்தையும் உங்களின் முக நூல் பக்கத்தில் SHARE செய்யுங்கள்.
முகநூலில் உங்களுடன் இருக்கும் நண்பர்கள் அனைவர்கள் இடத்திலும் அவரவர் பக்கங்களில் SHARE செய்ய சொல்லுங்கள். அப்போது தான் ஒன்று பத்தாக,பத்து நூறாக நமது எண்ணங்கள், கொள்கைகள் வின்னை எட்டும் அளவு அனைவரையும் சென்றடையும்.
இனி ந்மது சிந்தனை செயல் ஒன்றே ஒன்றாகத் தான். இருக்க வேண்டும்.அது வரப் போகும் நாடாளு மன்றத் தேர்தல். நாற்பது இடங்கள் நமக்கே! என்பது தான்.
அண்ணன் கலைஞர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! வேண்டுகோள் என்பதை விட உரிமையுடன் அவரிடம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.எனலாம். அவரிடம் நேரிலேயே சொல்லக் கூடிய உரிமை, சுதந்திரம் எனக்கிருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்தி இங்கு சொல்லிக் கொள்கிறேன்.எப்படி என்கிறீர்களா? இங்கு பழைய நினைவுகளை கொஞ்சம் அசை போட வேண்டியிருக்கிறது.
1965 மொழிப் போரை உங்களில் பலருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
அன்று மாணவ பருவத்தில் நான். நெல்லையில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் காலம்.
1965... சனவரி 25... தமிழ் மொழி போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள்...அறிஞர் அண்ணா... இந்தி திணிப்பை எதிர்த்து... இந்திய குடியரசு தினத்தைபுறகணித்து... அனைவரும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என கேட்டு கொண்ட நாள்... இதனால் அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன் போன்ற திமுக முன்னனி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்... தமிழ நாட்டை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டதிற்கு தலைவராக... சென்னை சட்ட கல்லூரி மாணவர் ரவி சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்... எல்.கணேசன், கா.காளிமுத்து,நா.காமராசன், ம.நடராசன் போன்றவர்கள்... இந்த மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்... நெல்லையில் அடியேன் உட்பட 10 மாணவர்கள் தலமையேற்று போராட்டத்தை நடத்தினோம்.
கடுமையான போலிஸ் அடக்குமுறை. பயம் கிஞ்சித்தும் இல்லை எம்மிடம்...அடித்து நொறுக்கப் பட்டோம். அனைத்து மாணவர்களையும் லாரியில் ஏற்றி பாளை சிறைச் சாலை நோக்கி புறப்படும் நேரம் ,எடுக்கப் பட்ட புகைப் படம் அன்றைய மாலை முரசில் வந்தது. துப்பாக்கியின் கத்தி முனை என் மார்பின் மீது. அன்றே விடுதலை செய்யப் பட்டு ஊருக்கு செல்வதற்காக(ஹாஸ்டல் எல்லாம் மூடப்பட்டதால்) நெல்லைபேருந்து நிலயத்தில்(இப்போதைய பழைய பேருந்து நிலயம்) தனியாக காத்திருக்கும் வேளை, கண நேரத்தில் காவலர்கள் என்னை சூழ்ந்து கொண்டு அடித்து துவைத்து அருகில் இருந்த மூத்திரம் கழிக்கும் இடத்தில் தள்ளி விட்டு போய் விட்டனர். காரணம் கையில் வைத்திருந்த பெட்டியில் இந்தி ஒழிக என்று எழுதியிருந்தேன் என்பதாலும், அன்றைய பத்திரிகையில் என் படம் வந்ததாலும்.தான் இந்த பரிசு. உடம்பெல்லாம் சிறு நீர்.கோலம். கேட்க நாதியற்று கிடந்த என்னை, ஒரு காங்கிரஸ் காரர் தூக்கி அவரது கதர் துண்டால் என் உடம்பெல்லாம் துடைத்து செந்தூர் செல்லும் பஸ்ஸில் அவரே டிக்கெட் எடுத்து கொடுத்து, தம்பி கவனமாக வீடு போய் சேர் என அனுப்பி வைத்தார். உடம்பெல்லாம் ரணத்தின் வலி. ஊமைக் காயங்கள். ஊரில் கொஞ்ச நாட்கள் ஓய்வு.
அப்போது அண்ணா நெல்லை வந்திருப்பதாக தகவல். போராட்டத்தை முன்னின்று நடத்திய நண்பர்கள் அனைவரும் அண்ணாவை சந்திப்பது என முடிவெடுத்து நெல்லைக்கு பயணம். நெல்லை நகர்மன்ற ஓய்வு விடுதியில் அண்ணா தங்கியிருந்தார். அண்ணா தூங்கி கொண்டிருப்பதாகவும் கொஞ்சம் காத்திருக்கும் படியும் வெளியில் வந்த அண்ணன் N.V.நடராசனார் கூறி முடிப்பதற்குள் அண்ணா அவசர அவசரமாக சட்டையை போட்டுக் கொண்டே வந்து எங்களை புன்முறுவலுடன் வரவேற்றார். ஒவ்வொருவரையும் விசாரிக்க தொடங்கி என் முறை வந்ததும், நான் கோபத்துடன், போராட்ட்த்தின் போது எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை. கொடுமைகளை சொல்லத் தொடங்கியதும், அண்ணா சிரித்துக் கொண்டே என் முதுகை வருடி, தம்பி! உன் பெயர் என்ன என்றதும் அதே கோபத்துடன் சுல்தான்……குலசை சுல்தான் என்றேன். அவரும் சுல்தான்……திப்பு சுல்தான்!! அது தான் கோபமும் வீரமும் ஒரு சேர முகத்தில் தெரிகிறது என்றார். அண்ணா அன்று சூட்டிய பெயரையும் மீறி என் ஊரின் தாக்கம், எங்க ஊர் பெயர் என்னோடு இன்றுவரை ஒட்டிக் கொண்ட்து குலசை சுல்தான் என்று.
அவரின் அந்த வருடல். ஒரு தாயின் வருடலாகத் தான் நான் உணர்ந்தேன். அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் கண்களில் நீரோட்டம்.
நெல்லையில் நடந்த சம்பவங்களை அண்ணாவிடன் விரிவாக எடுத்துரைத்தோம். அவரும் பொறுமையாக கேட்டுவிட்டு, பொறுமை காக்கும்படியும், முதலில் கவனமாக கல்லூரி படிப்பை முடிக்கும் படியும் அதுவரை தீவிர அரசியல் பங்களிப்பு வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கி,,”உங்களுக்காக நான்” இருக்கிறேன். கவலையை விடுங்கள் என்றார். அன்று அங்கு உதித்தது தான், ”உங்களுக்காக நான்” எனும் தாரக மந்திரம். இன்று வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்ற மந்திரச் சொல் பிறந்தது அன்று தான்.
 அண்ணா ஆட்சி பீட்த்தில் அமர்ந்த புதிதில் அவரை இரண்டாம் முறையாக சந்தித்த நிகழ்வை பின்பு விரிவாக கூறுகிறேன்.  
இதற்கிடையில்,
சென்னையை சேர்ந்த மாணவர்கள் முதல் அமைச்சர் பக்தவசலத்திடம் மனு கொடுக்க பேரணியாக வந்த போது... லால் பகதூர் சாஸ்தரி அரசின் துனை ராணுவ படை மாணவர்களை தாக்கியதில்... மாணவர்கள்... கூவம் நதியில் குதித்து தப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்... மதுரை வடக்கு மாசி வீதியில் ந.காமராசன்... கா.காளிமுத்து தலைமையில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய போது... அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.சேஷன்,காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து பால் கூட்டணி... மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு... என அனைத்துவெறியாட்டங்களையும் நடத்தி பல மாணவர்களை கொலை செய்து முடித்தது...
என்னுயிர் தோழர்கள்,சக மாணவ செல்வங்கள் பலரையும் இழந்து துடிக்கும் அவல நிலைக்கு தள்ளப் பட்டோம். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 100மாணவர்களுக்கும் மேல்... லால் பகதூர் சாஸ்தரி தலைமையில் இருந்த இந்திய அரசு மற்றும் பக்தவசலம் தலைமையில் இருந்த சென்னை மெட்ராஸ் ஸ்டேட் அரசால் கொல்லப்பட்டனர்... இந்த போராட்டத்தில் தமிழக மாணவர்கள்... இங்கிருந்த எல்லா சிறைகளையும்  நிறைத்து இருந்தோம்...காங்கிரஸின் அடக்கு முறை... தமிழுக்காக பேசிய அனைவரையும் உள்ளே போட்டது... தமிழுக்காக பேரணி நடத்திய சைவ சமய தலைவர் குன்றகுடி திருவண்ணாமலை ஆதினம் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்...
மொழிக்காக போராடி சிறை சென்ற... ஒரே சமய தலைவர் குன்றக்குடி ஆதினமாக மட்டுமே இருப்பார்... இந்தியப் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டோரைத் தவிர சின்னசாமி, முத்து, ரங்கநாதன், சாரங்கபாணி,சிவலிங்கம் மற்றும் வீரப்பன் ஆகியோர் தமக்குத் தாமே நெருப்பூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராகத் தற்கொலை செய்து தம் இன்னுயிரை நீத்தனர். இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கான காரணம் இன்னும் எவ்வளவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்வி குறியே... ஏதோ இந்த போராட்டம் திமுகவின் போராட்டம் போல் நிறைய பேர் நினைத்து கொண்டுள்ள்னர்...
உண்மையான காரணம்... 1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு சட்டம் கொண்டு வரப்பட்ட போது... 15 ஆண்டுகளில்... மக்கள் அதிகமாக பேசும் இந்தியை இந்தியா முழுவதும் அலுவல் மொழியாக்கி விட வேண்டும்... என நேரு,மற்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது... அதாவது... இந்திய அரசு... மற்ற ஸ்டேட் அரசு நிர்வாகங்களில் ஆங்கிலம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்... ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை கொண்டு வருவது என்பது திட்டம்...  
இந்த திட்டத்தை முதலில் எதிர்த்தவரகள் மேற்கு வங்கத்தினர்... பின்னர் மானமுள்ள தமிழர்கள் இதனை தீவிரமாக எதிர்த்தோம்... 1963 இல் அறிஞர் அண்ணா... நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்... அதிகமானவர்கள் பேசும் மொழியை குறைவானவர்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும்? அப்படி என்றால் குறைவானவர்கள் பேசும் மொழி என்னவாகும்? அதிகமானவர்கள் பேசும் மொழி மட்டுமே அலுவல் மொழி என்றால்... அதிகமாக இருக்கும் காகத்தைவிட்டு... ஏன் மயிலை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பினார்... வங்கத்தவர் மற்றும் தமிழர்களின் உணர்வுகளை காலின் கீழே போட்டு மிதித்து விட்டு... 1965 சனவரி 26 இல் இருந்து இந்திமட்டுமே... இந்தியாவில் இயங்க முடியும் எனும் அதிகார சட்டதிற்கு...காங்கிரஸ் குறியாக காய் நகர்த்தியது...
காங்கிரஸ் மோசடியாக... வல்லமை ஆதிக்கத்தின் மூலம்... சிறுபான்மைமக்கள் பேசும்... மொழிகளை... அழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தமிழ் நாட்டில் வெடித்ததுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம்... 

உயிர் மூச்சும் உயிர் துடிப்பும் பகுதி-2

November 13, 2013 at 6:26pm
அண்ணாவுடன் இரண்டாம் முறை சந்திப்பு:
1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரளவு தணிந்திருந்தது. முற்றிலும் ஓய்ந்து விட்டது என சொல்ல முடியாது. இந்த சூழ்நிலையில் தான் 1967 பொது தேர்தல் வருகிறது. எம் மாணவர்கள் சார்பாக விருது நகரில் நண்பர் பெ.சீனிவாசன் பெருந் தலைவர் மரியாதைக்குரிய பெரியவர் காம ராஜர் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.
மொழிப் போராட்டத்தின் விளைவாக கொந்தளித்து போயிருந்த மாணவர் சமுதாயத்தின் சார்பாக நெல்லையிலிருந்து எங்களில் சிலர் பெ.சீனிவாசனின் வெற்றிக்காக களம் இறங்கினோம். இரவு பகல் பாராமல், தூக்கம் தொலைத்து பல இரவுகள் உணவின்றி, தேர்தல் அலுவலகமான சிறிய கீற்று கொட்டகையில் தங்கி (அன்று தேர்தலுக்கென்று செலவு செய்ய கூட போதிய பணமில்லாத நிலை அவருக்கு.) தேர்தல் பணியாற்றி இறுதியில் வெற்றிக் கனியை பறித்தோம். பெருந்தலைவர் அவர்கள் ஒரு மாணவனால் தோற்கடிக்கப் பட்டது நாட்டிலுள்ள அனைவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தது.
தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி கட்டிலில் அமர்கிறது. அண்ணா முதல்வராகிறார்.
வெற்றிக் களிப்பில் மாணவர் சமூகம்.அண்ணாவை சந்திக்க விருது நகர் வெற்றி வீரர் பெ..சீனி வாசனுடன் நாங்கள் அண்னவை சந்திக்க அவரது நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு சென்றோம். புன்னகை மலரும் முகத்துடன் எங்களை வரவேற்றார். இருப்பினும் முகத்தில் சிறிய வாட்டம்.முதல்வர் என்ற எந்தவித பந்தாவுமின்றி அமைதியாக அமர்ந்திருந்தார். நாங்களோ வெற்றி களிப்பில் மகிழ்வுடன் பேசத் தொடங்கினோம். பெருந்தலைவர் தோற்றதில், எங்களால் தோற்கடிக்கப் பட்டதில் அவருக்கு வருத்தம் இருந்திருக்கும் போல. அதனால் எங்களின் வெற்றியைப் பற்றி பேசாமல் மற்ற விஷயங்களைப் பேசினார். பேச்சின் நடுவே வழக்கம் போல் அறிவுரைகளை வழங்கினார். உங்களில் சிலர் படிப்பை முடித்திருக்கலாம். இன்னும் கொஞ்ச காலம் பொறுமை காக்கவும். காலம் கனியட்டும். உங்களை உரிய முறையில் பயன் படுத்திக் கொள்வேன். என்று சொல்லி “ இன்று உங்களால் நான்” என்ற அந்த அமுத வரியோடு முடித்தார். 
அன்றைய கால கட்டத்தில் எங்களிடமும் எந்தவித கோரிக்கயும் இல்லை. எந்த விதமான உதவியையும் எதிர் பார்த்தும் செல்லவில்லை.அன்று மாணவர்கள் உழைப்பினில் வெற்றி பெற்ற நண்பர் பெ.சீனி வாசன் பின் அ.தி.மு.க வுக்கு சென்றார். பல பதவி சுகங்களை அனுபவித்தார் என்பது உங்களில் பலரும் அறிந்த செய்தி தான்.அன்று தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்து இன்று வரை திராவிட கட்சிகளே ஆட்சியில் இருப்பதைப் பார்த்து ஓரமாக இருந்து மகிழ்கிறோம்.இதுவரை எந்தவொரு உதவியோ,பதவியோ எதிர்பார்த்து யாரிடமும் சென்றதில்லை. அரசு வழங்கிய மொழிப் போர் தியாகிக் கான எந்த சலுகைகளையும், அரசு வழங்கும் எந்த இலவசங்களையும் வாங்க மறுத்து வாழ்ந்து வரும் ஒரு உண்மையான தி.மு.க. தொண்டன் நான். தாய்க்கு சேவை செய்வதற்கு கூலியை எதிர் நோக்காதவன்.
இன்று ஆட்சியில் இருப்போரும் சரி, நம் கழக ஆட்சியில் பதவியில் இருந்தோரும் சரி, அவர்களின் கட்சிக்காக செய்த தியாகங்களை விட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல எம் தியாகம், உழைப்பு என்று மார் தட்டி சொல்வேன்.
60 களில் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான வீடுகளின் பெயர்கள்,விலாஸ் என்றும், நிவாஸ் என்றும் வில்லா என்றும் வழக்கத்தில் இருந்த கால கட்டத்தில் எங்கள் ஊரில் முதன் முதலில் எங்களின் வீட்டுக்கு தமிழ் மனைஎன்றும், தாய் வீடு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்கள் நாங்கள்.அந்த மொழி உணர்வோடு இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.
அன்றைய MLA கொளத்தூர் கோவிந்தன் அவர்களின் சகோதரர் குணசேகரன், தளபதியின் நெருங்கிய நண்பர். என்னுடன் பணிபுரிந்தவர். எனக்கு உற்ற தோழன். அவருடன் 1971ல் ஒரு நாள் மாலை தளபதியாரை சந்தித்து பொழுதினை கழித்தது மறக்க முடியாத அனுபவம்.அதனால் தான் மீண்டும் சொல்கிறேன், கழகத்தை ஆட்சியில் அமர வைத்த என் போன்றோருக்கு, நடக்கும் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டும் துணிவுமிருக்கிறது. கடமையும் இருக்கிறது.
அந்த எண்ணத்தில் தான் அண்ணன் கலைஞருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
கலைஞர் அவர்களே! வரும் தேர்தல்களில் எக் காரணங்கொண்டும் மத வாத சக்தி களுடன் கூட்டணி வேண்டாம். சிறுபான்மை சமூகத்திற்கு நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். இன்னும் செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எம்மிடம் உண்டு. நாங்கள், எங்கள் சமுதாயம் துணை நிற்போம் உங்களுடன்.இன்று ஆட்சியில் இல்லாத நிலையை பயன் படுத்தி நம்மை விட்டு நன்றி மறந்து சென்றவர்களை நாளை நாம் ஆட்சிக்கு வந்ததும் திரும்ப ஒட்டி உறவாட வருபவர்களை எக் காரணங்கொண்டும் சேர்க்க வேண்டாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களின் இளகிய மனதால் நடந்ததை மறப்போம் என சொல்லி இணைத்து கொள்வீர்களோ என்ற எண்ணத்தில் தான் சொல்கிறேன்.வரும் பாராளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமக்கே என்ற எண்ணத்தோடு கடுமையாக உழைக்க உன் உடன் பிறப்புகள் தயாராகி விட்டோம். கவலையை விடுங்கள்.
அன்பு சகோதரர்களே!இந்த எனது கோரிக்கை மடலை நம் குழுமத்தில் உள்ள யாராவது கலைஞர், தளபதியார் பார்வைக்கு கிடைக்கும் படி செய்தால் மிகுந்த நன்றியுடையவன் ஆக இருப்பேன். இது ஏதோ உதவிகளை எதிர் பார்த்து அல்ல, என் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் முகமாகத் தான் இந்த வேண்டுகோள்.நான் முன் பதிவில் கூறியது போல் நமது சிந்தனை, செயல் அனைத்துமே வரும் தேர்தலை முன்னிறுத்தியே அமைய வேண்டும். அதற்கு முடிந்த அளவு முக நூலினை பயன் படுத்திக் கொள்வோம்.வெற்றி நமதே! நாற்பதும் நமதே!!
--குலசை சுல்தான்

No comments:

Post a Comment