Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

சுய தொழில்கள்-22.1 நேந்திரன் சிப்ஸ்..தயாரிப்பு

நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper







 

ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து சிப்ஸ் தயாரித்து விற்று நல்ல லாபம் அடைந்து வருகிறோம் என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம் நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு. மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது. பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து அறுவடை செய்தால், அதற்குண்டான விலை கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான் கிடைக்கிறது. வாங்குபவர் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது. போட்டி நிறைந்த வாழைத்தார் நேரடி விற்ப னையை தவிர்த்து, வாழைக் காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் பலன் உண்டு. இதனால் நேந்திரன் வாழைக்காயை சிப்ஸாக தயாரிக்க முடிவெடுத்தேன்.

3 ஏக்கர் நிலத்தில் விளையும் நேந்திரன் வாழைத்தார் மட்டும் சிப்ஸ் தயாரிப்புக்கு போதாது என்பதால், இயற்கை விவசாயம் மூலம் நேந்திரன் தயாரிக்கும் மற்ற விவசாயிகளையும் சேர்த்து கூட்டாக சிப்ஸ் தயாரிக்கிறேன். மாருதி ஆர்கானிக் பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தமிழ்நாடு இயற்கை விவசாய வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளோம். நிறுவனத்தில் மேலும் இப்பகுதியில் உள்ள இயற்கை நேந்திரன் வாழை விவசாயிகளையும் இணைத்து கூடுதலாக தயாரிக்க உள்ளோம். சிப்ஸ் தயாரிப்புக்கு இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தேங்காயில் இருந்து பிழியப்பட்ட எண்ணெயை பயன்படுத்துகிறோம். நேந்திரன் வாழைத்தாரை மதிப்பு கூட்டப்பட்ட சிப்ஸாக விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. வாழைத்தாராக விற்றபோது ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கப்படும் விளைபொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் நல்ல லாபம் பெறலாம்.

கட்டமைப்பு, முதலீடு: நான்கு தூண்கள் நட்டு ஷெட் அமைக்க வேண்டும் (செலவு-ரூ.10,000). அதில் மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு கட்ட வேண்டும். (ரூ. 3000) இரும்பிலான எண்ணெய் சட்டி 1 ( ரூ.1,750), கரண்டி, எண்ணெய் வடிகட்டி சட்டி 2, வாழைக்காய் சீவும் கருவி 2, உரித்த வாழைக்காய் அலச வாளி 2, பொரித்த சிப்ஸ் வைக்க பிளாஸ்டிக் கூடை 2 ஆகியவை வேண்டும் (ரூ.2,250.) எடை மெஷின் ரூ.3,500, சீலிங் மெஷின் ரூ.3000 என மொத்த முதலீடு ரூ.23,500.

கிடைக்கும் இடங்கள்: அடுப்பை கட்டிட தொழிலாளர்களே கட்டி கொடுப்பார்கள். அடுப்பு எரிக்க மரத்தூள், கடலை தோல், முந்திரி தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவை எளிதில் கிடைக்கிறது. நேந்திரன் வாழைக்காய்களை விவசாயம் செய்யாதவர்கள், அவற்றை சந்தை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் ஏலங்களில் கொள்முதல் செய்யலாம். இதர பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கிறது.

உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நாளைக்கு 50 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். அதற்கு 150 கிலோ நேந்திரன் வாழைக்காய் வேண்டும். கிலோ சராசரி விலை ரூ.16 வீதம் ரூ.2,400, தேங்காய் எண்ணெய் 1 டின் 17 கிலோ ரூ.2,380, எரிபொருள் கிலோவுக்கு ரூ.7 வீதம் ரூ.350, நேந்திரன் சிப்ஸ் பொரிக்கும் தொழிலாளர் கூலி 2 பேருக்கு மொத்தம் ரூ.600, பேக்கிங் செலவு ரூ.150 என மொத்தம் ரூ.5,880. (ஒரு கிலோ சிப்ஸ் சராசரி உற்பத்தி செலவு ரூ.118).

வருவாய் (ஒரு நாளைக்கு): நேந்திரன் சிப்ஸ் ஒரு கிலோ குறைந்தபட்சம் கிலோ ரூ.160, அதிகபட்சம் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாய் ரூ.8,000. குறைந்தபட்ச லாபம் ரூ.2,120, அதிகபட்ச வருவாய் ரூ.9,000. அதிகபட்ச லாபம் 3,120.

சந்தை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகளில் இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரிவுகள் தனியாக உள்ளன. அங்கு விற்பனை செய்யலாம். அதோடு வழக்கமான சிப்ஸ்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் விற்கலாம். தரமான நேந்திரன் சிப்ஸ், கடைகளில் சில்லரை விலையாக கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்கின்றனர். உற்பத்தி செய்பவர்களிடம் ரூ.160 முதல் ரூ.180க்கு கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. தரமான சிப்ஸ்களுக்கு வரவேற்பு உள்ளது. சிப்ஸ்கள் 2 மாதம் வரை கெடாது. ருசியும் பலருக்கு பிடிப்பதால் சந்தை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும்.

தயாரிப்பது எப்படி?

நேந்திரன் வாழைக்காய்கள் பச்சையாக இருக்க வேண்டும். சிறு கத்தியால் வாழைக்காயின் மேல் இருந்து கீழாக தோலில் கீற வேண்டும். கீறிய தோலுக்குள் உள்ளே கத்தியை நுழைத்து காய்க்கும், தோலுக்கும் இடையே நெம்ப வேண்டும். பின்னர் கை விரல்களால் நெம்பினால் தோலை முழுதாக உரித்து விடலாம். பின்னர் அதை நல்ல தண்ணீரில் அலசிய பின், காய்ந்த எண்ணெயில் நேரடியாக வட்டமாக சீவி போட வேண்டும். எண்ணெயில் விழும் நேந்திரன் துண்டுகள் பொரியும் போது சத்தம் வரும், அது லேசாக அடங்கும் போது ஒரு குழிக்கரண்டியில் உப்புத் தண்ணீரை அள்ளி எண்ணெயில் ஊற்ற வேண்டும். சட்டியில் சிப்ஸ் மீண்டும் சத்தத்துடன் பொரியும். சத்தம் அடங்கிய பின், சிப்ஸ்களை கரண்டியில் அள்ளி, தூக்கிப்போட்டு பிடித்தால் சலசலவென சத்தம் கேட் கும். அப்படி கேட்டால் நன் றாக வெந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை வடிகட்டி சட்டியில் போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அதை, 200, 250 கிராம் வீதம் எடை போட்டு பேக்கிங் செய்யலாம்.


மதிப்புக் கூட்டினால்...லாபத்தைக் கூட்டலாம்... நேந்திரன் சிப்ஸ் தயாரிப்பில் கலக்கும் தம்பதி !



ஜி.பழனிச்சாமி

நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான்,
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி!

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்!

தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம்கிறதால, 24 வருஷமா வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு பகுதியா பிரிச்சு, சுழற்சி முறையில வெள்ளாமை பண்றேன். அதனால எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருஷத்துக்கு முன்ன நண்பர் ஒருத்தர் மூலமா பஞ்சகவ்யா பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போ, நல்ல பலன் கிடைச்சதால, இயற்கை வழி விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!

அந்த சமயத்துல கோயம்புத்தூர்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருஷத்துல அருமையான மாற்றம் தெரிஞ்சது.

மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில நோய்த் தாக்குதலே இல்லாம... காயெல்லாம் திரட்சியா காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போ... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கைக்கு மாறின பிறகு... பதினஞ்சு டன் மகசூல் கிடைச்சுது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமா கிடைக்கவே... சந்தோஷமா நகர ஆரம்பிச்சுது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!

என் தோட்டத்துல விளையற வாழையில குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனா, அவர் கூடுதலா கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால... உடனடியா, சிப்ஸ் தயாரிப்புல இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!

''ஆரம்பத்துல இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால, தேங்காய் எண்ணெயில இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளா பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம்.

நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில விளைஞ்சதால சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!

''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகள்ல ஆர்டரும் கொடுத்தாங்க.

அடுத்த வாரத்துல நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!

15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தார்ல இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு : கே.ஆர். சுந்தரம்,
செல்போன்: 96009-16166
thanks vikatan
Engr.Sulthan

No comments:

Post a Comment