Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 29, 2012

சுய தொழில்கள்-4.1 வெள்ளாடு வளர்ப்பு

சுய தொழில்கள் பற்றிய பதிவுகள் ஆரம்பித்த நாளிலிருந்து அனேக நண்பர்கள் ஆடு வளர்ப்பு பற்றி பதிவு போடும்படி மிகவும் ஆவலுடன் கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களுக்காக இதோ வெள்ளாடு வளர்ப்பு பற்றியப் பதிவு.
நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.கொஞ்சம் சிரமமான தொழில் என்றாலும் செல்வம் கொழிக்கும் தொழில் இது. சொந்த இடம், கால்நடைத் தீவனம் உற்பத்தி செய்ய வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது. நன்கு திட்டமிடல், நோய் தடுப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இது ஒரு லாபகரமான தொழில் தான்.




வெள்ளாடு வளர்ப்பு


வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

யார் தொடங்கலாம்?
  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்
நன்மைகள்
  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை
வெள்ளாட்டு இனங்கள்
சிறந்த இந்திய இனங்கள்
ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
பீட்டல் - பஞ்சாப்
பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
சுர்தி - குஜராத்
காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
வங்காள ஆடு - மேற்கு வங்காளம்
இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்
அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்
வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
ஜமுனாபாரி.
  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85 கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி
  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.
போயர்
  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்
  • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
  • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
  • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
  • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
  • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
  • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
தீவனப் பாரமரிப்பு
  • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
  • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
  • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
  • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
  • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100
  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
  • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
  • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
  • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
  • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்
இனபெருக்கப் பாரமரிப்பு.
  • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
  • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
  • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
  • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
  • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
  • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
  • சினை காலம் 145-150 நாட்கள்.
குடற் புழு நீக்கம்
  • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
  • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
தடுப்பூசிகள்
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
  • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.
கொட்டகை பாரமரிப்பு
1.ஆழ்கூள முறை
  • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
  • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
  • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்
2.உயர் மட்ட தரை முறை
  • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
  • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்


வளர்ப்பு முறைகள்
1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
  • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
2.கொட்டகை முறை.
  • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
  • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
வெள்ளாடு காப்பீடு திட்டம்
  • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
  • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.


பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பு


ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்


பாலமேடு: பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது. வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது. ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. முன்னணி அசைவ உணவகங்களில் ஜமுனாபாரி மாமிச வகைகளும் இடம் பெறுகிறது. ஒரு கிலோ தனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதை விட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்ப்போருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்றுமதிக்கு உகந்தது:ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட ஜமுனா ஆட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள், சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி "டின்'களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் அதிக புரதச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலை கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஈத்துக்கு மூன்று குட்டி: பாலமேட்டை சேர்ந்த ஜமுனாபாரி பண்ணை மேலாளர் பட்டுராஜன், ஆடு வளர்க்கும் ராஜேந்திரன் (45) கூறும்போது, ""ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய் எதிர்ப்பு அதிகம். கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். ஒரு ஈத்துக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்து தூசி மற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது. வியாபார நோக்கமின்றி சொந்த உபயோகத்துக்காக வளர்க்கிறோம்,'" என்றனர். விவரங்களுக்கு பட்டுராஜன் மொபைலில் (97866 90370) தொடர்பு கொள்ளலாம்.

ஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்

வான்கோழி, காடை முயல் கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும் நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.ஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம்குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில்பரஸ்பரம் மாறி இருக்கின்றன.ஆடுகளைக் கொட்டிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்து விட்ட சுந்தர்ராஜன். “பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் செளரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்என்று பெருமிதத்தோடு ஒரு ஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுத்தார். தற்போது 57 வயதாகும் சுந்தராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப் போகவே சட்டப் பணிக்கு மொத்தமாக, முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டார்.
அந்த ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு வந்தப்போ அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் எனக்குத் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப்போயிடுச்சு. அந்த சமயத்துல வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார். அந்த ரெண்டு ஆடுதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளா பெருகியிருக்கு. இதுக்காக நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே காலியா கிடந்த கறிக்கோழிக்கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.அதிகபட்சம் ரெண்டரை அடி உயரம்தான் இதுங்க வளருதங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான் எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த நோயுமே வர்றதில்லை. பூச்சிமருந்துகூட கொடு்குறதில்லைனா பார்த்துக்கோங்க. காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச்சோளத்தைக் கொடுத்து. தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குல மேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.எந்த இலை, தழையையும் கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு, ‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்ன்ற மாதிரிகொழுகொழுனு ஆயிடும். மேய்ச்சலுக்காகவே தட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம். மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா மறுதழைவு வந்துடும். ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்என்று சுந்தரராஜன் நிறுத்த, தொடர்ந்தார் செண்பகவல்லி.
ஆடுகளுக்குனு எயும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில் நாங்களே உற்பத்தி பண்ற மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு மூணு தடவை குட்டி ஈனும். இந்த ஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க. அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்குகளை எடுக்குறதுக்கு இந்த வகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுகஎன்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின் பெருமையைச் சொன்னார்.நிறைவாக வருமானம் பற்றிய பேசிய சுந்தராஜன், “கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு வளர்க்கறதால பெரியளவுல விற்பனை செய்யலை. கிடாக்குட்டிகளை மட்டும் ஏழு மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும். உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படி அஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு. கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்என்றார் .

தொடர்புக்கு சுந்தர்ராஜன்
அலைபேசி: 93675-33111


7 மாதம் 40 ஆயிரம் கொட்டிக் கொடுக்கும் கொடி ஆடுகள்




கொடி ஆடுகளை பற்றி சரோஜா கூறுவதுதாவது ஆடு வளர்த்தே வீடு கட்டியிரக்கேன். பொண்ணுங்களைப் படிக்க வெச்சு, கட்டிக் கொடுத்திருக்கேன். ஒரு கஷ்டமும் இல்லாம குடும்பத்தை ஒட்டிக்கிட்டிருக்கேன். இந்த ஆடுகளுக்காக நான் எந்தச் செலவையும் செய்யுறதில்ல என்று சரோஜா அவர்கள் பேசத் தொடங்கினார்.

நம்பிக்கையான கொடி ஆடுகள் :
“நம்ம பாரம்பர்ய ரசமான கொடி ஆடுகளையும், கன்னி ஆடுகளையும்தான் நான் வளர்த்துகிட்டிருக்கென். கொடி ஆட்டுக்குக்காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும். அதுல கரும்போறை, செம்போறைனு ரெண்டு வகை இருக்கு. கருப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல கருப்புப் புள்ளிகளும் இருந்தா கரும்போறை. சிவப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல, சிவப்புப் புள்ளிகளும் இருந்தா செம்போறை. இப்ப என்கிட்ட கரும்போறை மட்டும்தான் இருக்குது.

ஏழு மாதத்துக்கு ஒரு ஈத்து : கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். அஞ்சு மாசம் சினைக்காலம். குட்டி போட்ட ரெண்டு மாசத்துலயே திரும்பவும் சினை பிடிச்சுடும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். அதனால புட்டிப்பால் எல்லாம் தர வேண்டியதில்ல, போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்கறதால குட்டிக நல்ல ஆரோக்கியத் தோட வளரும்.
ஏழு மாதத்தில் விற்பனை : கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். அந்த சமயத்துல விற்பனை செய்தா ஒரு பெட்டை அடு 2,250 ரூபாய், கிடா 3,000 ரூபாய்னு விலை (குறைந்தபட்சம்) போகும்”
கைகொடுக்கும் கன்னி ஆடு : “ கன்னி ஆடு கொஞ்சம் குட்டையா, உடம்பு குறுகலா, திகாத்திரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். இதுல பால்கன்னி, செங்கன்னினு ரெண்டு வகை இருக்குது. கண் ஒரத்துலயும் கொம்பிலிருந்து வாய் வரைக்கும் ரெண்டு சிவப்பு கோடு இருக்கும். அதேபோல, காது ஒரத்துலயும், கால்கள்லயும் சிவப்பு கோடுக இருக்கும். இது, செங்கன்னி. இந்தக் கோடெல்லாம் வெள்ளையா இருந்தா பால் கன்னி.
கன்னி ஆடுக முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால் புட்டிப்பால் தேவையே இருக்காது. கன்னி ஆடுகளைப் பொறுத்தவரை ஏழு மாச வயசுல ஒரு பெட்டை 10 கிலோ எடையும், கிடா 15 கிலோஎடையும் இருக்கும். பெட்டை 1,500 ரூபாய், கிடா 2,250 ரூபாய்னு விலை போகம்.
ஏழு மாசத்துக்கொரு தடவை 40 ஆயிரம் : ரெண்டு வகையிலயும் கலந்துகட்டி மொத்தம் 10 பெரிய ஆடுங்க என்கிட்ட இருக்குது கணக்குப் பாத்தா ஏழு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்கல்லாம் குட்டி போட்டுக்கிட்டே இருக்கும். ஈத்துக்கு 10 பெரிய ஆடுங்க மூலமா, 20 குட்டிங்க கிடைச்சுடும். அந்தக் குட்டிகளையெல்லாம் ஏழு மாசம் வரைக்கும் வளர்த்து, அதுக்குப் பிறகு விலைக்குக் கொடுத்துடுவேன். இதன் மூலமா எப்படிப் பார்த்தாலும் 40 ஆயிரம் ரூபாய்க்குக் குறையா வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும். இப்படி நான் விலைக்குக் கொடுக்குற சமயத்துல, புதுசா 20 குட்டி ஆடுங்க வந்துடும் மொத்தத்தையும் சேர்த்து பராமரிக்க ஆரம்பிச்சா ஒரு தடவை ஆடுகளை வித்துக்கிட்டே இருக்கறதை ஒரு வழக்கமாகவே வெச்சுருக்கேன். இது எனக்கு ரொம்பவே வசதியா இருக்கு.
எப்பவுமே 10 தாய் ஆடுகளும், 20 இளம் ஆடுகளும் இருக்குற மாதிரி வெச்சுகிடடு, மத்ததைக் கழிச்சுடுவேன், 10 தாய் ஆட்டுக்கு ஒரு பெரிய கிடா போதும்.

பராமரிப்பு என்பதே இல்லை : பராமரிப்புனு பார்த்தா பெருசா எதுவுமே இல்ல. பகல்ல பக்கத்துல ஆத்தோரத்துல மேய்ச்சுகிட்டு வந்து ராத்திரியில கட்டிப்போட்டுடுவேன். பனிக் காலத்துலகூட எந்தப்பிரச்னையும் வந்ததில்ல. பரண் இல்ல தரையிலதான் படுத்துக் கிடக்குது. பேன், உண்ணி தொந்தரவுகள் இல்ல. ஒருமுறைக் கூட ஒட்டுண்ணி நீக்கம் செஞ்சதில்ல. குடற்புழு நீக்கம்கூட செஞ்சத்தில்ல. மேய்ச்சலுக்கு போகும்போது குட்டைகள்ல தேங்கி கிடக்குற தண்ணீரைதான் இந்த ஆடுகள் குடிக்குது. இதுக்குனு தனியா காட்டகைக்குள்ள தண்ணீர் தொட்டி வைக்கல

தீவன சாகுபடி முக்கியம்
30 அடி நீளம், 10 அடி அகலத்துல கொட்டகை அமைச்சு நாலு பக்கமும். வலை அமைச்சு அதை ரெண்டு பகதியா பிரிச்சு, ஒரு பகுதியா பிரிச்சு, ஒரு பகுதியில பெரிய ஆடுகளையும், இன்னொர பகுதியில குட்டி ஆடுகளையும் வெச்சுக்கலாம். கொட்டகையில் தண்ணீர்த் தொட்டி கண்டிப்பா இருக்கணும். பத்து பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா போதும். கிடாக்களை அதிகளவுல வெச்சுக்கக் கூடாது. ஒண்ணோட ஒண்ணு முடடிக்கும். அதைவிட தீவன உற்பத்தி ரொம்ப முக்கியம். அதை ஏக்கர் அளவுல சூபதபுல், அகத்தி, கிளரிசீடியா, மலர்பேரி, சங்குப் புஷ்பம், முயல்மசால், வேலிமசால், வேம்பு, கொருக்காப்புளி மாதிரியான பசுந்தீவனங்களை சாகுபடி செஞ்சுக்கணும். வேற அடர்தீவனம், கலப்புத் தீவனமெல்லாம் தேவையேயில்லை.
குட்டிகள் பிறந்து மூணாவது மாசத்துல, தாய்ப்பால் குடிக்குற காலத்துலயே அரை கிலோ பசுந்தீவனம் கொடுக்க அரம்பிச்சுடணும். நாலாவது மாசம் தினம் ஒன்றரைக் கிலோவும், அஞ்சாவது மாசத்தல 3 கிலோவும் கொடுக்கணும். அதுக்கப்பறம் வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் கூட்டிக்கலாம். எட்டு மாச வயசுல ஒவ்வொரு ஆட்டுக்கும் தினம் 5 கிலோ தீவனமும், அதுக்கப்பறம் 7 கிலோவும் கிடைக்குற மாதிரி பாத்துக்கணும். ரெண்டு வகையான ஆடுகளுமே, உயிர் எடைக்கு ஒரு கிலோ 150 ரூபாய்னு விலை போகுது.
கொடி ஆடுகளைக் காப்பாற்றுங்கள்
“இந்த மாதிரியான ஆடுகதான் ஏழை விவசாயிகளுக்கு வருமானத்தைத் தரக்கூடியது நம்ம சூழலுக்கு ஏத்ததும்கூட ஆனா, இந்த வகை ஆடெல்லாம் இப்போ குறைஞ்சுகிட்டே வருதுங்கறதுதான் வேதனையான விஷயம். இதையெல்லாம் பாதுகாக்குறதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். இதன் மூலமா நம்ம மக்களளோட பொருளாதார நிலைமையையும் சரிஞ்சுடாம காப்பாத்த முடியும்”

தொடர்புக்கு
சரோஜா
(உறவினரின் அலைபேசி) 98376-63517
ஆதிநாராயணன் 98656-13616
செளந்தரபாண்டியன் 94431-84974


கொட்டிக்கொடுக்கும் கொட்டில்






ராஜ் டேனியல் (அலைபேசி 0451 2421057) பயிற்றுனர் ஆடு வளர்ப்பு பற்றி கூறுகையில் கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினமாகிக் கொண்டே வருகிறது. வெள்ளாடு உள்ளிட்டவைகளை கொட்டில் முறை ஆடு வளர்ப்பு மூலம் வளர்ப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆடுகளை வெளி இடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க விரும்புறவங்க, முதல்ல ரெண்டு ஏக்கர் அளவுக்காவது தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார்படுத்திக்கணும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் இதையெல்லாம் வேலியா நடலாம். கம்பி வேலி அமைச்சாலும் ரொம்ப நல்லது. ஒரு ஏக்கர் அளவுல பசுந்தீவனங்களை கட்டாயம் பயிர் பண்ணனும். மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் பண்ணிக்கலாம். பசுந்தீவனம் வளர்க்கற இடம், ஆடுகள் இருக்கற இடம் ரெண்டுக்கும் நடுவுலயும் வேலி அமைக்கணும்.
20 பெட்டை, ஒரு கிடா கொண்ட கூட்டத்தை ஒரு யூனிட்டுன்னு சொல்வோம். வளர்ந்த ஒரு பெட்டை ஆட்டுக்கு, பதினைந்து சதுர அடி இடம் தேவை. கிடா, சினை ஆடு, குட்டிப் போட்ட ஆடுகளுக்கு இருபது சதுர அடி தேவைப்படும். ஆக, ஒரு யூனிட்டுக்கு 20 வளர்ந்த பெட்டைகள், 1 கிடா, பத்து பதினைந்து குட்டிகள்ன்னு கணக்குப் போட்டா.. சுமாரா 650 சதுர அடியில செவ்வக வடிவமான கொட்டில் தேவைப்படும். வளர்ற குட்டிகளை வைக்கறதுக்கு 200 சதுர அடியில தனியா ரெண்டு கொட்டில், நோய் தாக்கின ஆடுகளுக்குன்னு 200 சதுர அடியில இரண்டு கொட்டில்களும் கட்டாயம் தேவைப்படும். மொத்தமா 1,450 சதுர அடி (3.32 சென்ட்) வேணும்.

தரையிலிருந்து உயரமாக பெரிய கொட்டில் மட்டும் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆடுங்க ஏறும் போது சறுக்காம இருக்குறதுக்கு மரத்துலயே படிகள் வைக்கலாம். கொட்டிலை உயரமா அமைக்கறதுக்கு கான்கிரீட் தூண், இல்லைன்னா பனை மரத்தைப் பயன்படுத்தலாம். உயரம் கம்மியா இருந்தா, ஆடுகளோட கழிவுல இருந்து வெளிய வர்ற வாயுக்களால ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் வரும். சுத்தம் செய்யுறதுக்கும் கஷ்டமாப் போயிடும். சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலயே வெச்சுக்கலாம். எத்தனை யூனிட் அமைச்சாலும் நாலு பக்கமும் முப்பதடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலி இருக்கணும். இந்த இடைவெளியில் தினமும் காலை நேரத்துல வெயில் படுற மாதிரி, ஆடுகளை மேய விடலாம். நோய், நொடிகள் வரும் போது அவற்றைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.
கொட்டிலுக்குக் கூரையா தென்னை, பனை ஓலைகளை வெச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டா, வெப்பம் அதிகமா இருக்கும். எல்லாக் கொட்டில்களுக்குமே பக்கவாட்டு அடைப்புக்கு மூங்கில் தப்பைகளையே பயன்படுத்தலாம். அடிப்பாகத்துக்கு, சாதாரண மரப்பலகையே போதுமானது. வரிசையா மரப்பலகைகளை சீரான இடைவெளி விட்டு இணைச்சு ஆணி அடிக்கணும். பலகைகளோட இருந்தாத்தான் வளையாம இருக்கும் பலகைகளை சேக்குறதுக்கு முன்னாடி குரூட் ஆயில்ல ஊறவெச்சுட்டா.. சிறுநீர், கழிவுகளால பலகைக்கு பாதிப்பு வராது. ஊறவும் செய்யாது. இடைவெளி வழியாக் கழிவுகள் கீழே விழுந்திடும். அதனால கழிவுகளை சேகரிக்கிறதுக்கு சுலபமாயிடும்.

சுத்தம் சுகம் தரும் !
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம். கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.இந்தக் கொட்டில் அமைப்பு ரொம்பவும் செலவு கம்மியான முறை.
நாமக்கல் மாவட்டம், காளி செட்டிபட்டியில் கொட்டில் முறையில் தலைச்சேரி ஆடுகளை வளர்த்து வரும் ரகுநாதன் (அலைபேசி : 94426 25504) அதைப்பற்றிச் சொல்கிறார்.
“பத்து வருசமா ஆடு வளர்த்தாலும் மூன்றரை வருசமாத்தான் கொட்டில் அமைச்சு நல்ல முறையில வளக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல லாபம் கிடைக்குது. எண்ணூறு சதுர அடியில் தரையிலேயே சிமென்ட் போட்டக் கொட்டில் அமைச்சிருக்கேன். பக்க வாட்டுல கம்பி வலை போட்டிருக்கேன். மேல உயரமா ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் போட்டிருக்கேன். தனியே குட்டிகளுக்கு ஒரு அறை இருக்கு. என்கிட்ட இருக்கிற வளர்ந்த ஆடுகள் நாற்பதுக்கும், குட்டிகள் இருபதுக்கும் இதுவே போதுமானதாத்தான் இருக்கு. பசுந்தீவனமா வேலிமசால், கோ3 புல்லெல்லாம் தோட்டத்துலேயே வளர்த்திருக்கேன். அதோட சேத்துக் காய்ந்த தீவனத்துக்காக கடலைக் கொடி கொடுக்குறேன்.
தினமும் அடர் தீவனமும் கொடுத்தா நல்லா வளரும். மேய்ச்சல் முறையில் வளர்க்கிறவ்பொ ஆறு மாசத்துக்கு பத்து, பதினோரு கிலோ வரை தான் எடை வரும். ஆனா, கொட்டில் முறையில் ஆறு மாசத்துக்குள்ள இருபது கிலோ வரை வந்துடும். நல்ல விலை கிடைக்கும். கிலோ 120 ரூபாய்ன்னு விலை வெச்சி ஆட்டைக் கொடுத்துடுவேன்.
குறைந்தபட்ச லாபமே குஷியானது தான்
ஒவ்வொரு பெட்டையும் எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குறைந்தபட்சம் ரெண்டு குட்டி போடும். அந்தக் குட்டிக்கு அடுத்த எட்டு மாதத்தில் குட்டி போட ஆரம்பித்துவிடும். சரியாக கருத்தரிக்காத ஆடுகள், குட்டி ஈனாத ஆடுகளை உடனடியாக கழித்து விடவேண்டும். தேவைக்கு அதிகமான கிடாக்களையும் கழிக்க வேண்டியது அவசியம். சரியான முறையில் மருத்துவம் மற்றும் அடர்தீவனங்கள் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலே 8 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இருபது ஆடுகள் மற்றும் அதன் மூலம் குட்டிகள் ஆகியவற்றை வைத்து 40 மாதங்களில் கிடைக்கும் லாபக்கணக்கு இது. ஆண்டுக்கு கணக்கிட்டால், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரும்படி கிடைக்கும். இளங்குட்டிகள் 200 எண்ணிக்கையில் நம்மிடம் இருக்குமாறு பராமரிக்கலாம்.
தரையிலிருந்து உயரமாக அமைக்கப்பட்ட மூங்கிலால் ஆன கொட்டில் போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். தரையிலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் அமைத்தால் 75 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டில் அமைக்கும் பொருட்களைகப் பொறுத்து விலை வித்தியாசப்படும்.
அடர்தீவன தயாரிப்பு !
மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம் கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம். அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம். தாது உப்பு 2 சதவிகிதம். உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம் இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும். கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம். மேற்சொன்ன பொருட்களில் விலைக் குறைவாக கிடைப்பவற்றை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு, மற்றவற்றை குறைத்து சதவிகித அளவைப் பராமரிக்கலாம். அடர் தீவனம் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும்.

கொட்டில் முறை ஆடு வளர்ப்புக்கான செலவு - வரவுக் கணக்கு (முதல் 40 மாதங்களுக்கானது)
விவரம்
செலவு வரவு
நிலையான செலவு கொட்டில்கள் அமைக்க (சராசரி)
60,000
பெட்டை ஆடுகள் 20
24,000
கிடா 1
2,000
நடைமுறைச் செலவுகள் தீவனம் (நாமே உற்பத்தி செய்வது)
10,000
இன்சூரன்ஸ்
10,000
மருத்துவச் செலவு
10,000
அடர் தீவனம்
30,000
இதரச் செலவுகள்
4,000
800 ஆடுகள் விற்பனை மூலம் (குறைந்தபட்சம்)
8,00,000
கழிவு விற்பனை முகாம்

50,000
மொத்தம்
1,50,000
8,50,000
நிகர லாபம்

7,00,000

நாளை, தொடர்ந்து செம்மறி ஆ்டு வளர்ப்பு பற்றியும், வெள்ளாடு வளர்ப்புப் பற்றிய மேலதிக விவரங்கள், தமிழ் நாடு வேளாண்மை கழகம் வெளியிட்ட அறிக்கை போன்றவற்றை இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறேன்.

தகவல்கள் இணையங்களிலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

No comments:

Post a Comment