Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 29, 2012

சுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்பு

சுய தொழில்கள் வரிசையில் இனி பார்க்கப் போவது கப்பா பைகஸ் or பெப்சி பாசி வளர்ப்பு பற்றியது. இது ஒரு கடல் சார்ந்த தொழில். கடலோர ஊர்களில் வசிக்கும் நண்பர்கள் அவர்களுக்கு நன்கு பழகிய மீனவ சமூக ஆட்களின் துணை கொண்டு இத் தொழிலைச் செய்யலாம். யாரோ ஒரு வெளிநாட்டுக் கம்பெனியான பெப்சி நம் மீனவ மக்களிடம் விதைப் பாசியை கொடுத்து மொத்தத்தையும் அறுவடை செய்து அயல் நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை,கொள்ளையாக சம்பாதிக்கிறார்கள். இதை ஏன் நாம் செய்யக் கூடாது? திறமையாக, திட்டமிட்டு செய்தால் இதுவும் ஒரு லாபம் தரும் தொழில் தான்.Engr.Sulthanகப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு

பாசி என்றதும் காலை வழுக்கிவிடும் ஈரப் பரப்புதான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். உண்மையில், பாசியைக் கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. அவற்றைப் பற்றி தெரிந்துகொண்டால், லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலை நம்மால் மேற்கொள்ளமுடியும். ஆம், பாசிகள் நமக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களில் பாசி கலந்துள்ளது. நம் உணவுக்குச் சுவை கூட்டும் பணியையும் மேற்கொள்கிறது.
ராமேஸ்வரம் தீவில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில், மீனவப் பெண்கள் பாசி சேகரிப்பைத் தங்கள் பிழைப்பாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக, பாசி சேகரித்தலோடு, பாசி வளர்க்கவும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் இதில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு மற்றும் தண்ணீரூற்று கிராமங்களில் மும்முரமாக பாசி வளர்ப்புத் தொழில் நடந்துவருகிறது. இது தவிர, மண்டபம் வடக்குக் கடல் பகுதியிலும் பாசி வளர்ப்புத் தொழில் மிகவும் பிரபலம். நிலத்தில் செய்யும் விவசாயத்தைப் போன்றதுதான் இது. எப்படி விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி உழுது, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, களையகற்றி, அறுவடை செய்கிறார்களோ அதைப் போல பாசி வளர்ப்பும் பல நிலைகளைக் கொண்ட கடல் விவசாயமாகும்.
பொதுவாக, பாசிகள் (Algae) ஒளிச் சேர்க்கை செய்ய வல்ல தாவர உயிரினங்கள். இவை நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடல்களில் அவை வாழ்கின்றன. பாசிகள் பலவகைப்படும். அவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்கமுடியும். உயிரியல் தொழில்நுட்பம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது. அவற்றில் ஒன்று கப்பா பைகஸ் பாசி. இது வளர்ப்பதற்குத் தோதானது என்பதால் ராமேஸ்வரம் பகுதியில் கப்பா பாசி விவசாயம் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாசியை உள்ளூர்வாசிகள் கப்பா பாசி என்றும் பெப்சி பாசி என்றும் கூறுகின்றனர். பெப்சி நிறுவனமே, விதைப்பாசியைக் கொடுத்து, அதை வளர்க்கும் முறையையும் சொல்லிக்கொடுத்து, வளர்த்த பாசியைக் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு (மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா) ஏற்றுமதி செய்வதால் பெப்சி பாசி என்னும் பெயர் கிடைத்துள்ளது.
கப்பா பாசியானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். கடல் நீரில் உள்ள தாது உப்புகளையும் சூரிய வெளிச்சத்தையும் கொண்டு அதிக செலவில்லாமல் வளரும் தாவரம் இது. அதனால் இந்தத் தாவரத்தை இயற்கை மனிதனுக்குக் கொடுத்த கொடையாகக் கருதலாம். இந்த கப்பா பைகஸ் கடல் பாசியிலிருந்து 250க்கும் அதிகமான பொருள்கள் தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
குறிப்பாக, உணவு, குளிர்பானம், அழகுச் சாதனம், மூலிகைப் பொருட்கள், மருந்து, வாசனைத் திரவியங்கள், பல்பொடி, ஜெல்லி மிட்டாய் போன்றவற்றில் இந்த வகை பாசி பயன்படுத்தப்படுகிறது. இப்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலகச் சந்தையில் தேவை அதிகரித்துகொண்டே போகிறது. தேவைக்கு ஏற்ற அளவு உற்பத்தி இல்லாததால் பாசியின் விலையும் கூடுகிறது. அறிமுகமான கட்டத்தில் ஒரு கிலோ காய்ந்த பாசி 12 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 20 ரூபாய். கப்பா பாசி வளர்ப்புக்கு ஆதரவு அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
ராமேஸ்வரததில், ஆண்கள், பெண்கள் இருவரும் பாசி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் கடலுக்குப் போகும் நேரங்களில் பெண்கள் பாசியை வளர்க்கிறார்கள். துணை வருமானத்துக்கான சிறு தொழிலாக இது இருப்பதால், ராமேஸ்வரம் கிராமங்களில் கணிசமான குடும்பங்கள் பாசி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
மூங்கில் மிதவையைப் பயன்படுத்தி இந்தப் பாசியை வளர்க்கவேண்டும். கடலில் வைத்துதான் வளர்க்கவேண்டும் என்பதால் அதற்குத் தகுந்த சூழல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பின் பயன்கள்

  1. எளிதாக யாரும் செய்யக்கூடிய லாபகரமான தொழில்.
  2. கடலில் போட்ட 45 முதல் 60 நாட்களில் வளர்ந்து பயன் தருவதால் போட்ட முதலீட்டை விரைவில் பெற முடியும். தினந்தோறும் அறுவடை செய்வதால் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
  3. கடல் நீரில் உள்ள தாதுப் பொருட்களை உறிஞ்சி சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் வளர்வதால் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். எளிதாகக் கிடைக்கும் மூங்கில், நைலான் கயிற்றை கொண்டு குறைந்த முதலீட்டில் பாசி வளர்ப்புக்கான மிதவை செய்து தொழில் தொடங்கலாம்.
  4. இது தவிர வங்கிக் கடன் உதவியும் அரசு மானியக் கடனும் கிடைக்கிறது.
  5. தன் உழைப்பால் சுய தொழில் செய்து முன்னேற விரும்பும் மக்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு.
  6. கடலில் இயற்கை சீற்றத்தினால் வரும் எதிர்பாராத இழப்பைச் சரிக்கட்ட காப்பீடு வசதியும் உண்டு.
  7. உதாரணமாக ஒரு நபர் ரூ.10,000 முதலீட்டில் தொழில் செய்தால் ஓர் ஆண்டு இறுதியில் ரூ.60,000 முதல் 1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.

கப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான உகந்த கடல் சூழல்

  1. ஆற்று நீர் கலக்காத கடல் பகுதி
  2. இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வராத கடல் பகுதி
  3. நல்ல நீரோட்டமான ஆழம் குறைந்த கடல் பகுதி
  4. தேவையான வெப்பமும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும் பகுதி

கப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான மூங்கில் மிதவையின் விவரம்

  1. மிதவையின் அளவு – 3மீ x 3மீ
  2. ஒரு மிதவையில் இருபது குறுக்குக் கயிறுகள் கட்ட வேண்டும்.
  3. ஒரு கயிற்றில் இருபது கண்ணிகள் இருக்க வேண்டும்.
  4. ஒரு கண்ணியில் 150 கிராம் அளவுள்ள விதைப்பாசி சொருக வேண்டும். அப்படியானால் இருபது கண்ணியில் (அதாவது 1 கயிறு) 20 x 150 = 3 கிலோ விதைப்பாசி சொருக வேண்டும். ஆக ஒரு மிதவைக்கு 20 x 3 கிலோ = 60 கிலோ விதைப் பாசி தேவைப்படும்.
  5. கடலில் போட்ட 45 முதல் 60 நாள்களில், நான்கில் இருந்து ஆறு மடங்கு வரை பாசி வளர்ச்சி அடையும். அதாவது 60 கிலோ விதைப்பாசியிலிருந்து, மிதவை ஒன்றுக்கு 240 முதல் 360 கிலோ வரை பாசியை அறுவடை செய்யலாம்.
  6. ஒரு மிதவையில் குறைந்தபட்சம் 240 கிலோ அறுவடை செய்தாலே, விதைப் பாசி 60 கிலோ போக, 180 கிலோ உற்பத்தி கிடைக்கும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்தால், 18 கிலோவாகக் குறையும். காய்ந்த பாசி ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. அப்படி பார்க்கும் போது 18 கிலோ காய்ந்த பாசி ரூ.360க்கு விற்பனையாகிறது. ஒரு நாள் ஒரு அறுவடையில் ஒரு மிதவைக்கே ரூ360 வருமானம் கிடைக்கிறது.
  7. ஒரு நபருக்கு 40 மிதவை கொடுத்து, நாள் ஒன்றுக்கு ஒரு மிதவை அறுவடை செய்தால் ஒரு மாதத்திற்கு – 30 x ரூ. 360 =ரூ.10,800 மாத வருமானம் கிடைக்கிறது.
  8. மழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் தவிர்த்து 9 மாதங்களில் 9 x ரூ 10,800 = ரூ.97,200 வருட வருமானம் கிடைக்கிறது.

மூங்கில் மிதவை தயார் செய்யத் தேவையான உபகரணங்கள்

  1. 3 முதல் 4 அங்குலம் கொண்ட 5 மூங்கில்கள். (மிதவை செய்ய).
  2. மிதவையைக் கடல் அலை அடித்து செல்லாமல் இருக்க ஐந்து பல் கொண்ட நங்கூரம் இரண்டு.
  3. முங்கில்களைக் கட்ட நைலான் கயறு.
  4. 400 விதை பாசி கோர்க்கும் கண்ணிகள்.
  5. 6 மி.மீ தடிமன் கொண்ட 36மீ நீளமுள்ள நைலான் கயறு (மிதவை கட்ட).
  6. மிதவையைச் சுற்றி கட்ட நைலான் மீன் வலை ஒரு கிலோ. (மீன்கள் கடிக்காமல் இருக்க)
  7. 10 மி.மீ தடிமன் கொண்ட 28மீ நங்கூரம் கட்டும் கயிறு.
  8. மிதவையை இணைத்துக் கட்ட 6 மி.மீ தடிமன் கொண்ட 5 மீ நீளமுள்ள நைலான் கயிறு.
  9. கண்ணி ஒன்றுக்கு 150 கிராம் வீதம் 400 கண்ணிகளுக்கு 60 கிலோ விதைப் பாசி.

ஒரு மிதவைக்கு மேற்கண்ட பொருட்களை வாங்க ரூ.700 முதல் 800 வரை செலவாகும். ஒரு மிதவை அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை உழைக்கும். மேலும், அதிகக் காற்று, ஆக்ரோஷமான அலைகள் அடிக்கும் சமயத்தில் மூங்கில் மிதவைகள் அதிகமாக சேதமடைந்து பயனற்றதாக ஆகிவிடும். கடற்கரையில் பாசிகளைக் காயவைக்கும்போது மழை பெய்தால் அவற்றை நனையாமல் பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடற்கரையிலே குடிசைகளை ஏற்படுத்தி பாசிகளை பாதுகாத்து வருகின்றனர்.
இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். கப்பா பாசி வளர்ப்பைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. இந்தப் பாசி பெப்சி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பவர்களால் இப்பாசி வளர்ப்பும் சந்தேகிக்கப்படுகின்றது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மன்னார் வளைகுடா தேசியக் கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டதால், கடலில் இயற்கையாகக் கிடைக்கும் பாசிகளைச் சேகரிப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டுள்ளன. பாசி சேகரிப்பைத் தொழிலாகச் செய்து வந்த மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி, பாசிகளைச் சேகரிக்க கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாக பாசி வளர்ப்பதே. கப்பா பாசி அந்த வாய்ப்பைத் தந்து, மீனவக் குடும்பங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

Engr.Sulthan

No comments:

Post a Comment