Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 29, 2012

சுய தொழில்கள்-3 பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு

பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு
பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள்.
இத் தொழில் தொடங்க ஆவல் உள்ளவர்கள், திட்ட அறிக்கை, வங்கி கடன் போன்ற தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கி, துறையினரிடம் கேட்டு தொடங்கவும். நான் இங்கு கோடு தான் போட்டிருக்கிறேன். நீங்கள் ரோடு போட்டு கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்




பணம் தரும் பாக்குமட்டை!






து பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா. பிருந்தாதேவி பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.

இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனது கணவர் ஜி. பாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்தது. என்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோது, அதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்தது. இந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். திருச்சியில் சென்று பயிற்சி பெற்று, சிவகாசியில் காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?

4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெற்றேன். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்தது. இந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன். இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. மூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களுடன் நானும் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தேன்.

பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?

இதில் பல ரகங்கள் உள்ளன. நான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.

இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன். அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.

மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?

வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.


பாக்குமட்டை தட்டு தயாரிப்பு


பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு, அதை நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. இயந்திரம் மின்சார உதவியுடன் வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறது. வட்டம், சதுரம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறது. மிகவும் குறுகிய நேரத்தில் சாதாரணமாக 100 தட்டு வரை தயாரிக்கலாம். ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சதுர வடிவ தட்டுகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. எனவே, உற்பத்தியாளர்கள் வடிவத்தை மாற்றி வட்ட வடிவத்திலும், அறுங்கோண வடிவத்திலும் மாற்றி விற்பனை செய்கிறோம். சீஸன் சமயத்தில் நாளொன்றுக்கு 3000 தட்டு வரை உற்பத்தி செய்யலாம்.

பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி


மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் பாக்கு தட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.

ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால், பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத் தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு தட்டு தயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும் மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.

தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றி, பாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள், டம்ளர்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் புதிய முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பாத்திரங்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




பாக்கு மட்டை தட்டுகளின் செய்முறை



பாக்குமட்டை தட்டுகள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பாக்கு மரங்களின்
மட்டைகளில் இருந்து தயரிக்கப்படுகிறது இவை முற்றிலும் இயற்கையான
முறையில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் பாக்குமரங்களில் இருந்து
மட்டைகள் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவை சிறந்த கண்கணிப்புக்கு
உட்படுத்தப்பட்டு சேமித்து பின் நன்னீரில் நனைத்து ஊறவைத்து அதனை முற்றிலும்
மனிதர்களால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் வைத்து தேவையான அளவுகளில்
வெட்டியும் பின் சுடச்செயதும் நமக்கு வேண்டிய வடிவத்தை தரும் வகையில்
உருவாக்கபப்டுகிறது இதில் எந்தொரு இடத்திலும் செயற்கையான வண்ணங்களோ
அல்லது மனமோ வேறு எந்த ஒரு ரசயனமோ இடப்படுவது இல்லை முற்றிலும்
இயற்கையான ஒன்றே ஆகும்.



பணம் கொழிக்கும் பாக்குமட்டை தட்டு

குறைந்த முதலீட்டில் சம்பாதிக்க வாய்ப்பு


சேலம்: சேலம் எஸ்.பி.எஸ்., இன்ஜினியரிங் நிறுவனத்தினரின் உதவியுடன், பணம் கொழிக்கும் பாக்கு மட்டை தட்டு தொழில் செய்து, குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இயற்கையை அழித்து வரும் பலவித பொருட்களை, நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக், பாலித்தின் போன்ற பொருட்களால் இயற்கை மட்டுமின்றி, மனிதர்களின் உடல்நலமும் சீர்கேடாகிறது. அதற்கு மாற்றாக பாக்கு மட்டைத் தட்டுகளின் பயன்பாடும், அதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பாக்கு மட்டை தட்டுகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்தி வரும் சேலத்தின் மிகப் பிரபலமான எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:எமது நிறுவனம் 1997 லிருந்து இந்த பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது. நாங்கள் முதன் முதலில் பெடல் டைப் மெசினை செய்து பார்த்தோம். பிறகு ஹேண்டில் டைப் மெசினை அறிமுகம் செய்தோம்.

பலர் கேட்டதால் ஆட்டோ மெசினை சேலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம். தற்போது தானாக இயங்கக்கூடிய ஆட்டோமெடிக் இயந்திரம் அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முறையாக நாங்கள் வடிவமைத்து சந்தைப்படுத்தியுள்ளோம். இந்த இயந்திரத்தில் பாக்கு மட்டையை வைத்து பட்டனை அழுத்தினால், தானாகவே இயங்கி தட்டு வடிவம் ஆனவுடன் தானாகவே இயங்கி தட்டுகள் வெளிவந்து விடும். மற்ற இயந்திரத்தை விட தட்டுகளை அழகாகவும், நேர்த்தியாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்யலாம்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த தட்டுகளாகவும், விருப்பத்திற்கேற்றவாறு லோகோ, போன், டிசைன் போன்றவற்றை எம்போசில் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹீட்டர்களுக்கு டிஜிட்டல் டெம்ப்ரேச்சர் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் எவ்வளவு வெப்பம் வைக்கலாம் என்று உறுதி செய்யலாம். குறைந்த மின் செலவே போதுமானது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதம். எஸ்.பி.எஸ். இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சேலம்-8, மொபைல்97906 98985, 97912 03708 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!
ஜி.மீனாட்சி





இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.
உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.
மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:
“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.
திருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,
எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்என்று விவரிக்கிறார் மல்லிகா.
எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.
எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.
தட்டுத் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.
துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.
தரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.
“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:
“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறதுஎன்கிறார்.
தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.
பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.
திருமணம் போன்ற விசேஷங்களில்பஃபேவிருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லைஎன்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.
“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.
வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காகவுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.
“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.
எங்களைத்தொடர்பு கொள்ள thendraltholaikkatchi@gmail.com என்கிற முகவரிக்கு உடன் தொடர்புகொள்ளுங்கள் அல்லது 9965119111 என்ற எண்ணுடன் பேசுங்கள் உங்களுக்கான அனைத்து விபரங்களும் கிடைக்கும்.

தொழில் முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு

பதிவு செய்த நாள் 9/15/2011 8:23:47
அன்னவாசல்: தொழில்முனைவோருக்கு பாக்கு மட்டை தயாரிப்பு பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவ ட்டம் அன்னவாசலில் மகளிர் தொழில் முனை வோர் சங்க தலைவி ஜெயந்தி நிருபர்களிடம் கூறுகையில், புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட தொழில்களுக்கு சங்கத்தின் மூலம் புதுக்கோட்டையில் பயிற்சி அளிக்கப்படும். பாக்கு மட்டை தட்டு தயாரித்தல், பயிற்சி மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் வங்கி கடன் பெறவும், தொழிலினை தொடர்ந்து நடத்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய தொலை பேசி எண் 04322227222, கைபேசி எண் 8870041656, 9659558222, 9659558333.ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தகவல்கள் இணையங்களிலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

No comments:

Post a Comment