Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

உங்கள் சொத்து வாரிசுக்கா, வழக்குக்கா?


தமிழகத்தில் 2012 டிசம்பர் வரை 7.8 லட்சம் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்குச் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பதில் செய்யும் குழப்பம், தயக்கம் மற்றும் சரியான முடிவுகளைப் பத்திரப் பதிவு செய்யாதது, இவைகளே வழக்குகளுக்குக் காரணங்கள்.

வழிவழியாக வரும் சொத்துக்கள் மீது நமக்கு உணர்வுபூர்வமான ஆசையும் அதே நேரத்தில் அதைப் பலர் சொந்தம் கொண்டாடும்போது தோன்றும் எதிர்மறை சிந்தனைகளும், அவை சார்ந்த பிரச்சினைகளும் தவிர்க்க இயலாதுதான். மேலும், சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயரும்போது அதனைப் பிரித்துக்கொள்வதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பங்கள் ஒருநாள் பெரிதாகி வெடிக்கும்போது அக்குடும்பம் சார்ந்த கட்டிடமும் சிதறிப்போகிறது.
அதேபோல, தந்தையும் தமையனும் சேர்ந்து வீட்டைக் கட்டிய பிறகு அதை மற்ற குழந்தைகளுக்குப் பிரித்துக்கொடுக்க முற்படும்போதும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படி வகை வகையான பிரச்சினைகள்.
பொதுவாக எல்லோருக்குமே சொத்தின் மீதானப் பார்வையை கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வகைப்படுத்தலாம். மனைவி, மக்கள் என்றான பிறகு, நம் ரத்த சொந்தங்களுடன் சொத்துக்களைப் பிரித்துக்கொள்வதில் நம் பார்வை மாறுபடத்தான் செய்கிறது. இது சரியா, தவறா? என்று ஆராய்வதைவிட மாற்றங்களைப் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது அவசியம்.
பெரும்பாலும் சொத்துக்களை வாங்கும்போதே குடும்பத்தினர் அதை எவ்வாறு பிரித்துக்கொள்வது என்பதையும் முடிவு செய்ய வேண்டும். சொத்துக்களை அடுத்த தலைமுறைக்குப் பிரித்துக்கொடுப்பதற்கு இந்தியாவில் சுமார் 45 விதமான சட்டங்கள் இருக்கின்றன. இந்து சட்டங்கள் ஆண் வழி, பெண் வழி சமுதாயங்களுக்கு வெவ்வேறாகவும், பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடுபவையாகவும் இருக்கின்றன. வயிற்றில் இருக்கும் குழந்தைக்குக்கூட அதன் தந்தையின் சொத்தில் பங்கு இருப்பதாக சட்டம் கூறுகிறது.
சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள வரி சிக்கல்கள் பல நேரங்களில் சரியான முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப்போடும். வரி செலுத்துவதைக் கண்டு அஞ்சாதீர்கள். செலுத்திய வரி அதிகம் என்றால் அதைத் திரும்பப் பெற முடியும். வரி கட்டாமல் சொத்தைப் பிரித்து அல்லது பிரிக்கமுடியாமல் அவதிப்படுவதைவிட வரி செலுத்துவது எவ்வளவோ மேல்.
இறப்பதற்கு முன்பு சொத்தை சட்டப்படி பிரித்துக்கொடுப்பது மிக நல்லது. அப்படி செய்வதால் வாரிசுகள் சண்டை தவிர்க்கப்படும். சட்ட நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் சொத்துக்கள் எளிதாக வாரிசுகளுக்கு சேரும். சொத்துக்கள் மற்றவர்களால் பிடுங்கப்படுவது தவிர்க்கப்படும். குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
உங்கள் சொத்துக்கள் வாரிசுகளுக்கா? இல்லை நீதிமன்ற வழக்குகளுக்கா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

No comments:

Post a Comment