Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 8, 2013

பத்தாயிரத்தில் பாங்காங்!


சில மாதங்களுக்கு முன்பு ஒரு பின்னிரவில், இணையத்தில் உலா வந்துக்கொண்டிருந்தபோது அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். 'ஏர் ஆசியா’ விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்குக்கு முதன்முறையாக, நேரடியாக விமான சேவையைத் துவங்கி இருக்கிறது என்றும் குறிப்பிட்ட தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்தால் சென்றுவர கட்டணம் வெறும் 10,000 மட்டுமே என இருந்தது. எனக்கு ஆச்சர்யம்!  

அதற்கு முந்தைய மாதம்தான் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று வந்தேன். அதற்கான விமான டிக்கெட் கட்டணம் மட்டுமே 13,000-த்து சொச்சம். ஆனால், வெறும் 10,000-த்தில் பாங்காக்  சென்றுவர முடியுமா? (கிட்டத்தட்ட சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தூரம்தான் பாங்காக். அது வடக்கே இது கிழக்கே. அவ்வளவுதான்.)
பொதுவாக மூன்று மாதத்திற்கு முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் அநேகமாக அனைத்து விமான நிறுவனங்களிலும் கட்டண சலுகை கிடைக்கும். ஆனாலும் பாங்காக் சென்றுவர மிகக் குறைந்த கட்டணம் இது. இந்த வெளிநாட்டு பயண வாய்ப்பைத் தவறவிட எனக்கு மனம் இல்லை. சரியான நேரத்தில், சரியாகத் திட்டம் தீட்டிச் செயல்பட்டால் சாமானியர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுப் பயணம் சாத்தியம் என்பது என் கடந்த ஆண்டு இலங்கை பயணத்தில் நான் உணர்ந்த விஷயம்.
இரண்டுநாள் பயணம் அது. கொலம்போ, கண்டி, நிகம்போ, நுவரயிலியா போன்ற இடங்களுக்குச் சென்று இருந்தோம். மொத்தமாக விமான கட்டணத்தையும் சேர்த்து அதற்குச் செலவானது வெறும் 8,000 சொச்சம். நம்ப முடியவில்லையா? தலை சுற்றினால் நீங்களே அதை பிடித்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உண்மை.
ஆனால், இப்போது இன்னும் இரண்டு நாட்களே இருந்தது பாங்காக் பயண சலுகை முடிய. ஆகவே, அவசரமாக இந்தப் பயணத்துக்கு நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு மின் அஞ்சலிலும் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்தேன். இரண்டு நாட்கள் என்பது மிகக் குறைந்த நேரம் என்பதால் விருப்பம் இருந்தும் முடிவு எடுக்கமுடியாத சூழலில் பலர் இருந்தனர்.
'பாஸ்போர்ட் இல்ல மச்சான். ரெண்டு நாள்ல எடுக்க முடியுமா?’ 'டிக்கெட் பதிவு பண்ணினதுக்கு அப்புறம் பொறுமையா பாஸ்போர்ட் எடுக்கலாமா?’ என்று ஆர்வத்தில் கடுப்படித்தனர் சிலர். அதுகூட பரவாயில்லை 'அந்த நாட்டுக்குப்போக பாஸ்போர்ட் தேவையா?’ என்று ஒருவன் கேட்டபோது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் எப்படியும் நான் தனியாகத்தான் பாங்காக் செல்வதுபோல் இருந்தது. ஆனால், அதற்கும் நான் தயாராகத்தான் இருந்தேன். காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில்  என்னுடைய பிஸினஸ் கிளையன்ட் ஒருவர் என்னை அங்கு வேலை நிமித்தமாக சில வாரங்கள் அழைத்திருந்தார். முழுக்க அவர்களின் செலவில் வந்த பயண அழைப்பு அது. அப்போது, அங்கு இந்தியர்கள்மீது இனவெறித் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. 'எனக்கு வயது மிகவும் குறைவு, இன்னும் திருமணம் ஆகவில்லை, இதற்கு முன்னர் வெளிநாடு பயணம் மேற்கொண்டதில்லை’ என்ற சில அபத்தமான காரணங்களால் என்னுடைய பிஸினஸ் விசாவை டெல்லியில் உள்ள ஆஸ்திரேலியா கான்சுலேட் நிராகரித்துவிட்டது.
அது பழைய கதை என்றாலும் எனக்கு இப்போது என்னுடைய பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் தேவைப்பட்டது. அடுத்த முறை ஆஸ்திரேலியா பயணிக்க வாய்ப்பு வரும்போது அதற்கு ஏதுவாக இருக்கும். இப்படி இருந்த சூழலில் திடீரென என் கல்லூரி நண்பனிடம் இருந்து ஒரு போன். 'உன் மெயில் பார்த்தேன், நானும் என் நண்பர்கள் இருவரும் தாய்லாந்து செல்லவேண்டும் என்று சில வாரங்களாக பிளான் செஞ்சிட்டு இருந்தோம். சாதாரணமாக பாங்காக் செல்ல விமான கட்டணம் மட்டும் 20,000-க்கு மேலாகும். இது நல்ல ஆஃபர். நாங்களும் வருகிறோம்' என்றான்.
அனைவரும் பேசி முடிவெடுத்து எல்லோருக்கும் ஏற்ற வகையில் மே மாத நடுவில் ஒரு வார பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்தோம். அதே மாதத்தில் மற்ற தேதிகளில் வெறும் எட்டாயிரத்திற்குக்கூட சென்று வர அப்போது டிக்கெட் இருந்தது. ஆனால், அந்தத் தேதி எங்களுக்குத் தோதாக இல்லை. ஒருவழியாக இப்போது டிக்கெட் முன்பதிவு செய்தாயிற்று.
பயணத்தின் ஒரு பகுதியாக எப்படியாவது புக்கெட் தீவு சென்றுவிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். புக்கெட், தாய்லாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள அந்நாட்டின் மிகப் பெரிய தீவாகும். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய பிறந்தநாளின்போது என்னுடைய குடும்பத்தினரை என் ஊரான சேலத்தில், ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு இரவு விருந்திற்காக அழைத்துச் சென்றேன்.
அப்போது உணவுகளை ஆர்டர் செய்தபோது மெனுவில் 'புக்கட் ஃபிஷ்’ என்று போட்டிருந்த மீனை பரிந்துரை செய்தார் அங்கிருந்த சிப்பந்தி. உள்ளங்கை அளவு ஸ்லைஸ்செய்த மீன்துண்டு வந்தது. நல்ல சுவை. ஆனால், விலை 400 சொச்சம். அது என்ன புக்கெட் மீன் என வீட்டுக்கு வந்தபின் தேடியபோதுதான் புக்கெட் என்ற தீவைப்பற்றி எனக்குப் பரிச்சயம் கிடைத்தது.
பாங்காக்கில் இருந்து புக்கெட் தீவு சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சாலை வழியாகப் பயணம் செய்தால் 13 மணி நேரம் ஆகும். விமானத்திலோ வெறும் ஒன்றரைமணி நேரம்தான். சாலை வழியே பாங்காங்கில் இருந்து புக்கெட் சென்று மீண்டும் திரும்பலாம் என்றால் அது பல பயணச் சிக்கல்களை ஏற்படுத்தும். விமானப்பிரயாணமே சிறந்த வழி என முடிவு செய்து அதற்கும் முன்பதிவு செய்தோம். அதே 'ஏர் ஆசியா’ நிறுவன விமானம். போய்வர மேலும் ஒருவருக்கு டிக்கெட் செலவு 5,000 ரூபாய். மூன்று நாட்கள் புக்கெட். இரண்டு நாள் பட்டாயா. கடைசி இரண்டு நாள் பாங்காக். இதுதான் ஆரம்பக்கட்ட யோசனை.
ஆனால் அங்கு சென்றபின் எங்கு தங்குவது? எங்கு சுற்றிப் பார்ப்பது? எல்லாவற்றுக்கும் மேலே எவ்வளவு செலவாகும்? எங்களிடம் எந்தத் தெளிவான பயணத்திட்டமும் இல்லை. ஆனால், பயணத்திற்கு இன்னும் மூன்று மாதம் முழுசாய் இருந்தது.
'மேக் மை ட்ரிப்’, 'கிளியர் ட்ரிப்’ போன்ற பயணச் சேவை நிறுவனங்களின் பேக்கேஜை தேடிப்பிடித்துப் பார்த்தோம். எதுலும் திருப்தி இல்லை. அவர்களிடம் எனக்கு என்ன பிரச்னை என்றால் அவர்களாகவே சில இடங்களைத் தேர்வு செய்து ஒரு லிஸ்ட் வைத்துஇருக்கிறார்கள். அவர்களிடம் புக் செய்த அனைவரையும் கும்பலாக ஒரு வாகனத்தில் ஒன்றாக ஏற்றி ஒவ்வொரு சுற்றுலா தளங்களாக அழைத்துச் சென்றுவருவர். அது ஓர் ஆட்டுமந்தைப்போல. அவர்கள் சொல்லும் நேரத்தில் நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் கூட்டிப்போகும் இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.  அவர்கள் தங்க வைக்கும் இடங்களில் நாம் தங்க வேண்டும். அவர்கள் சொல்லும் இடத்தில் சாப்பிட வேண்டும். ஆனால், இப்படிச் சென்று 'நானும் தாய்லாந்து சென்றேன்’ என்று பெருமைப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. அதுமட்டும் அல்லாமல் அவர்கள் வாங்கும் மூன்று நாள் பட்டாயா பாங்காக் பேக்கேஜ் கட்டணத்தில் நாங்கள் அதற்கும் மேல் புக்கெட் தீவிற்குச் சென்று மொத்தமாக ஒரு வாரம் செலவு செய்ய முடியும்.
இதற்காக அந்த ஒரு விஷயத்தில் தெளிவாய் இருந்தேன். நேரத்தை வீணாக்காமல் கூடுமான இடங்களுக்குச் செல்ல வேண்டும். நாமே திட்டம் தீட்டினால்தான் அது முடியும். ஒரு ஊருக்கு சுற்றுலா சென்று திரும்பினால் 'அடடே இதைப்பார்க்காமல் வந்துவிட்டோமே’ என்று பின்னர் வருத்தப்படக்கூடாது. ஆனால், இதை எப்படி சாத்தியப்படுத்துவது.
கூகுள் கடவுள் இருக்க பயமேன்? நாங்கள் பயணிக்கவிருக்கும் அனைத்து இடங்களிலும் பார்த்தே தீரவேண்டிய விஷயங்களை கூகுளில் ஆராய்ந்து பட்டியலிட்டேன். அந்த இடங்களைப்பற்றி மேலும் கூடுமானவரையிலான தகவல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன்.
மற்றவர்களின் பயணக் கட்டுரை, அனுபவங்கள் மூலம் முக்கியத் தகவல்கள் அறியப் பெற்றேன்.  தேவையான இடங்களின் புகைப்படங்களையும் அந்த இடங்களின் காணொளிகளையும் கண்டேன். நாங்கள் அங்கு தங்கும் நாட்களில் எந்த இடங்களை, விஷயங்களைப் பார்க்கமுடியும் என்று அந்தப் பட்டியலை திருத்திக் குறைத்தேன். தங்குவதற்கு சிறந்த நட்சத்திர ஹோட்டல்களை யூசர் ரேட்டிங் மூலம் தேர்வு செய்தேன். மொத்தத்தில் பயணம் ஆரம்பம் ஆகாமலே அனைத்து இடங்களும் எனக்கு அத்துப்படியானது. நேரில் சென்று அதை அனுபவிப்பது மட்டும்தான் பாக்கி. பல நாட்களின் கடின உழைப்பில் இப்போது கச்சிதமான எங்களின் பிரயாணத் திட்டம் தயாராகியிருந்தது. அதாவது முதல்நாள் ஆரம்பித்து கடைசி நாள்வரை நாங்கள் எத்தனை மணிக்கு, எங்கு செல்ல வேண்டும், எங்கு தங்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான பிரயாணத் திட்டம் அது.
சென்னையில் உள்ள சிறந்த டிராவல் ஏஜென்சிகளை நெட்டில் தேடிப்பிடித்து எங்கள் பிரயாணத் திட்டத்தை அனுப்பி கொட்டேஷன் கேட்டோம். அதில் நிறையப் பேர் இவ்வளவு நுணுக்கமான பயணத் திட்டத்தைத் தங்களால் செயல்படுத்தமுடியாது என ஒதுங்கிக்கொண்டனர். மூன்று ஏஜென்சி மட்டுமே அதற்கு கொட்டேஷன் அளித்தனர். அதில் ஒரு ஏஜென்சியில் இருந்து ஒரு பெண் போன் செய்தார்.
'சார் உங்களுக்கு அந்தப் பிரயாணத் திட்டம் எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தார்கள்?’
'இல்லை, நான்தான் கொஞ்சம் வொர்க் செய்தேன், ஏன் கேட்குறீங்க?'
'நாங்க கிட்டத்தட்ட எட்டு வருஷமா டூர் ஏஜென்சி நடத்துறோம். இதுவரைக்கும் இப்படி ஒரு துல்லியமான பிரயாணத் திட்டத்தை யாரும் கொடுத்ததில்லை.  இந்த நாடு அல்லது ஊர் போகணும்னு சொல்வாங்க. நாங்க பிளான் தயார் செய்து கொட்டேஷன் கொடுப்போம். ஆனால், இது ரொம்ப அருமையான திட்டம். பொதுவாக டூர் ஏஜென்சி அழைத்துப்போகாத பல பகுதிகள் அதில் இருக்கிறது. இதை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாமா?’ என்றார். 'நிச்சயமாக. ஆனால் எங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் அதற்கு கொட்டேஷன் கொடுங்கள்’ என்று சிரித்துக்கொண்டே நிபந்தனை விடுத்தேன்.
இப்படி ஆரம்பமாகி இனிதே முடிந்த எங்கள் தாய்லாந்து பயணம், இன்றும் மறக்க முடியாத அனுபவங்களை உள்ளடக்கியவை.  லியனார்டோ டி காப்ரியோ நடித்தThe Beach திரைப்படம் எடுக்கபட்ட பி.பி.தீவு (Phi Phi Iland) நிறைய தமிழ்ப் பாடல்கள் படமாக்கப்பட்ட 'ஜேம்ஸ் பாண்டு’ தீவு. படகில் பயணித்தவாறு பொருட்களை, உணவுகளை வாங்கிய மிதக்கும் சந்தை. கடலுக்கு அடியில் நடந்துசெல்வதைப்போன்ற ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் அண்டர் வாட்டர் வேர்ல்ட், விலங்குகளை மிக மிக அருகில் இருந்து ரசித்த 'கவோ கியோ’ (khao kheow) திறந்தவெளி உயிரியல் பூங்கா,  ஒரு மாலை மங்கும் நேரத்தில், அறுபத்தி இரண்டாவது மாடியில் உள்ள ஓர் உணவகத்தில் பாங்காக் அழகை ரசித்தவாறு உணவருந்தியது.... இன்னும் பல நினைவில் இருந்து நீங்கவில்லை. வாழ்க்கையில் ஒரு நாளாவது அனைவரும் செல்ல வேண்டிய அந்த இடங்கள், நான் அனுபவித்த அந்த சுவாரஸ்யங்கள், சிலிர்ப்புகள், ஆச்சர்யங்கள் நிறைய இருக்கிறது. நீங்களும் என்னைப்போலவே திட்டமிட்டு பயணித்தால் சொற்ப செலவில் பாங்காங்கை ரசித்துவரலாம்!
- சுவடுகள் செ.பிரவின்குமார்

No comments:

Post a Comment