Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 8, 2013

பொய்யென்று தெரிந்த பின்பும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அசத்தியவாதிகள் மூன்று அணிகளாக நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மக்கத்து முஷ்ரிக்குகள், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரே இந்த மூன்று சாரார்.
இவர்கள் மூவரும் தாங்கள் தான் சரியான பாதையில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். மூன்று சாராருமே சத்தியத்தில் இருப்பதாகச் சாதித்தது மக்களை வெகுவாகப் பாதித்தது. எது சத்தியம்? யார் சொல்வது சத்தியம்? என்று மக்கள் தடுமாறினர். உண்மையிலேயே தூய இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு இது தடைக்கல்லாக அமைந்தது.
அல்லாஹ் இந்தத் தருணத்தில் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்கு தன் தூதருக்கு ஓர் ஆயுதத்தை வழங்கினான்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)
இது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வலுவான ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கும் வழங்கியிருந்தான். இதைக் கொண்டு அவர்கள் அரசனின் கண்களில் விரலை விட்டு அசைத்தார்கள். அசத்தியத்திற்கு ஆதரவாக ஆணவத்தில் அவன் எடுத்து வைத்த வாதத்திற்கு இப்ராஹீம் நபி ஆப்பு வைத்ததை வெகுவாக அல்லாஹ் பாராட்டிச் சொல்கிறான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)
அசத்தியத்தில் இருக்கும் துரோகிகளுக்கு, அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் வாக்குறுதி தருகின்றான். இதன் மூலம் அசத்தியத்தில் இருப்பவர்கள் கூட தங்கள் வாதத் திறமையினால் ஜெயித்து விடுவார்கள் என்ற கருத்துக்கு மரண அடி கொடுக்கின்றான்.
இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியதுடன் அப்படி வாதம் செய்த போது, அசத்தியவாதிகள் தோற்று ஓடியதையும் அழகாக எடுத்துரைத்து, நபி (ஸல்) அவர்களுக்குத் தெம்பூட்டுகின்றான்.
அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.
இதன் படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அசத்தியவாதிகளுக்கு எதிராக அறை கூவல் விடுத்த போது மக்கத்து முஷ்ரிக்குகள் இதற்கு முன்வரவில்லை. அதனால் சத்தியத்திற்கு அது மாபெரும் வெற்றியாக அமைந்தது.
ஆனால் இதற்குப் பின்னாலும் யூத, கிறித்தவர்கள் வாதத்திற்கு வராததுடன் வாய் மூடி நிற்கவில்லை. தங்கள் மார்க்கங்கள் தான் சரியானவை என்று குருட்டுத் தனமாக சாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது ஆயுதத்தை வழங்குகின்றான். அது தான் முபாஹலா ஆகும்.
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் ”வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:61)
இந்த வசனத்தின் மூலம் முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
வேதக்காரர்கள் தங்கள் அணியின் பக்கம் சத்தியம் இருக்கின்றது என்றால் அவர்கள் இந்த முபாஹலாவுக்கு வரவேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம்! அசத்தியத்திற்குள்ள வீண் பிடிவாதம்! எனவே சத்தியம் வென்றது. அசத்தியம் அழிந்தது.
இதன் பிறகு இஸ்லாம் தான் அரபகத்தின் இறுதியான மார்க்கமானது. மக்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க், யூத, கிறித்தவ கொள்கைகளைத் தூக்கி எறிந்தனர்.
(அல்லாஹ் வழங்கியுள்ள இந்த இரண்டு ஆயுதங்கள் முஸ்­லிமல்லாதவர்களிடம் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. முஸ்­லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் உண்மை அறியும் கருவியாக, மெட்டல் டிடெக்டராக இந்த ஆயுதங்களைத் தந்திருக்கின்றான்.
முஸ்­லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றுக் கருத்துள்ளவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அதற்கு வரவில்லை என்றால் வர மறுப்பவர்களின் சாயம் அங்கேயே நன்றாக வெளுத்து விடும். அதற்கு மேலும் அவர்கள் தங்கள் நிலையைச் சரி கண்டால் அடுத்த வழி முபாஹலா தான்.
இதற்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் வரவில்லை என்றால் அவர்களிடம் உண்மை அறவே இல்லை என்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த இரண்டு தரப்பைக் குறித்து இறை நம்பிக்கையாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்? அதையும் அல்லாஹ்வே கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49:9)
இரண்டு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியில்லை என்பதை நாம் இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
தற்போது தவ்ஹீது ஜமாஅத்தின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்ட போது யார் சொல்வது உண்மை என்று அறிய முடியாமல் மக்கள் தடுமாறினார்கள். அப்போது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம். வரவில்லை.
ஏதேதோ சாக்கு சொன்னார்கள். இரண்டு தரப்பும் மூளையைப் போட்டு கசக்கும் ஆய்வு விவகாரங்கள் எல்லாம் இதில் இல்லை, பேசப்போவது உலக விஷயம் தான். இதற்கு வாதத் திறமையும் தேவையில்லை, ஆதாரங்கள் தான் தேவை என்றெல்லாம் சமாதானம் சொல்­லி அழைத்துப் பார்த்தோம். அப்போதும் வர மறுத்தார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எங்களிடம் உண்மையில்லை என்று தங்களது மவுனத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.
இதிலேயே அவர்களது முகத்திரை கிழிந்து அல்லாஹ் உண்மையின் பக்கம் வெற்றியைத் தந்தான். ஆனால் இதற்குப் பிறகும் தங்களை நியாயப்படுத்தி வந்ததால் அடுத்த ஆயுதமாக முபாஹலாவைக் கையிலெடுத்தோம். அதற்கும் மவுனத்தையே பதிலளித்தார்கள். வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பொய்யர்கள் என்பதைப் போட்டுடைத்து விட்டார்கள்.

இன்னொரு சாரார் இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதாவது அநீதி இழைக்கப்பட்டவனும் வேண்டும், அநியாயக்காரனும் வேண்டும், செருப்பால் அடித்தவனும் வேண்டும், அடி வாங்கியவனும் வேண்டும் என்ற நிலைபாடு தான் இது!
இந்த சாரார் இரண்டுமே வேண்டாம் என்று முடிவெடுத்தால் கூட அதை வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறலாம். ஆனால் இரண்டுமே வேண்டும் என்று சொல்வது நயவஞ்சக நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும் முடிவு தானே தவிர அல்லாஹ்வின் வசனத்திற்கு ஒப்பான முடிவல்ல.
எனவே இது போன்ற இரட்டை நிலை எடுப்பதை விடுத்து, குர்ஆனும் ஹதீசும் கூறும் வழியில் சத்தியத்தின் பக்கம் நின்று ஏகத்துவத்தைக் காக்கும் ஒரே நிலையை எடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக!

No comments:

Post a Comment