எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக
ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல்
மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து
முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு
விதிவிலக்கல்ல.
இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை
விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில்,
அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக
இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக
ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம்
பொருள்களை விற்பதற்கும் சேவைகளைத் தருவதற்கும் இணையத்தைப்
பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன.



